லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் சாம்பியன் பட்டத்தை போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் முதல் முறையாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இது அவர் ஒட்டுமொத்தமாக வெல்லும் ஆறாவது கிராண்ட் ஸ்லாம் பட்டம் ஆகும்.
இதுவரை நான்கு முறை பிரஞ்சு ஓபன் பட்டமும், ஒரு முறை அமெரிக்க ஓபன் பட்டமும் வென்ற ஸ்வியாடெக் முதல் முறையாக விம்பிள்டன் தொடரை கைப்பற்றி சாதனை படைத்திருக்கின்றார்.மகளிர் ஒற்றைப் பிரிவு இறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை அமண்டா உடன் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் பலப்பரீட்சை நடத்தினார்.

அமண்டா கடந்த சில ஆண்டுகளாக மனச்சிதைவுக்கு மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டு தற்போது தான் டென்னிஸ் போட்டிக்கு திரும்பி இருக்கிறார். இந்த சூழலில் முதல் முறையாக விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு அவர் தகுதி பெற்றதே சாதனையாக பார்க்கப்படுகிறது.
எனினும் ஸ்வியாடெக்கின் அனுபவ ஆட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இதனால் இந்த போட்டி ஒரு தலைபட்சமாக முடிவடைந்தது. ஒரு கேம்மை கூட இழக்காமல் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற ஸ்வியாடெக் ஆறுக்கு பூஜ்ஜியம், ஆறுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
இந்த போட்டி வெறும் 57 நிமிடங்கள் தான் நீடித்தது. இதை அடுத்து ஆறாவது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று தனது பயிற்சியாளர் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடினார். எனினும் ஒரு கேம் கூட வெற்றி பெறாததால் ஏமாற்றம் அடைந்த அமெரிக்க வீராங்கனை அமண்டா அழுது கொண்டே வெளியேறினார்.
இதனை அடுத்து பரிசளிப்பு நிகழ்ச்சிகள் பேசிய அமண்டா, விம்பிள்டன் தொடரில் விளையாடியது எனக்கு மறக்க முடியாத நினைவுகளை கொடுத்திருப்பதாகவும், தமக்கு முதல் சுற்றில் இருந்து ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
இந்த சூழ்நிலையில் வெற்றி பெற்ற ஸ்வியாடெக்கிற்கு, இந்திய ரூபாய் மதிப்பில் 35 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.
இதேபோன்று ரன்னர் அப் பட்டம் வென்ற அமெரிக்க வீராங்கனை அமண்டாவுக்கு 17 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு பட்டத்தை வென்ற முதல் போலாந்து வீராங்கனை என்ற சாதனையை ஸ்வியாடெக் படைத்திருக்கின்றார். வெற்றி பெற்ற பிறகு பேசிய ஸ்வியாடெக், விம்பிள்டன் பட்டத்தை நான் வெல்வேன் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. எனினும் என்னுடைய குழுவினர் தான் என் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார்கள். அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் என்று கூறியுள்ளார்.