லண்டன்: பாரம்பரியமிக்க விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தை நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி, பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் உள்ளிட்ட பிரபலங்கள் கண்டு களித்தனர்.
அப்போது பெடரர் வந்ததுக்கு நன்றி சொன்ன ஜோகோவிச், விராட் கோலியை குறிப்பிட மறந்து விட்டார். மேலும் விம்பிள்டன் ஒளிபரப்பிய தொலைக்காட்சிகளும் முதலில் விராட் கோலியை காட்டவில்லை. இந்த சூழலில் நேற்று போட்டியை நேரில் பார்த்த விராட் கோலி, ஜோகோவிச் வெற்றிக்கு பாராட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இதற்கு நேரடியாக நன்றி சொன்ன ஜோகோவிச், தாங்கள் வந்து எனக்கு ஆதரவளித்ததற்கு மிகவும் நன்றி என குறிப்பிட்டு இருந்தார். இதேபோன்று விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை ஒளிபரப்பு செய்த இந்திய சேனல்கள் நேற்று விராட் கோலியை சூழ்ந்து கொண்டனர்.அப்போது விராட் கோலியிடம் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.
இதற்கு விராட் கோலி அளித்த பதிலை தற்போது பார்க்கலாம். "10 ஆண்டுகளுக்கு பின்பு நான் விம்பிள்டன் தொடருக்கு வந்திருக்கின்றேன். இது உலகின் பாரம்பரியமிக்க டென்னிஸ் தொடர்களில் ஒன்று. இங்கு வந்திருப்பது மகிழ்ச்சியை கொடுக்கின்றது.அதே சமயம் விம்பிள்டன் போட்டி என்பது கடும் நெருக்கடிகள் நிறைந்தது. ஏனென்றால் இங்கு பல பெரிய நட்சத்திரங்கள் போட்டியை காண வருவார்கள்."
"அதுவும் சென்டர் கோர்ட்டில் போட்டியை விளையாடுவது என்பது கொஞ்சம் பயமாக தான் இருக்கும் என நினைக்கின்றேன். கிரிக்கெட்டில் நாங்கள் பேட்டிங் செய்யும்போது பார்வையாளர்கள் தூரத்தில் தான் இருப்பார்கள்.
இதனால் நம் களத்தில் செய்ய வேண்டியதை நமது மனநிலையில் ஆழ்ந்து செய்யலாம். ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதெல்லாம் தெரியாது."
"பவுண்டரி லைனில் இருக்கும் போது கூட பெரிய அளவு நெருக்கடி இருக்காது. ஆனால் இங்கு அப்படியல்ல. பார்வையாளர்கள் பேசும் ஒவ்வொன்றும் மைதானத்தை சுற்றி நடக்கும் ஒவ்வொன்றும் விளையாடும் வீரர்களுக்கு தெரியும்.
அது மிகப்பெரிய அழுத்தத்தை வீரர்களுக்கு ஏற்படுத்தும். எனக்கு டென்னிஸ் மீது மிகப்பெரிய மரியாதை இருக்கின்றது. உடல் தகுதி மனநலம் என அனைத்துமே சிறப்பாக இருக்க டென்னிஸ் உதவும்."
"விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை ஒப்பிட வேண்டும் என்றால் அதில் இருக்கும் நெருக்கடி உலக கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் மோதும் ஆட்டத்திற்கும் அல்லது உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கான ஆட்டத்திற்கும் நிகராக இருக்கும் என நினைக்கின்றேன். ஏனென்றால் கடும் அழுத்தம் காரணமாக உங்களுடைய கால்கள் நடுங்கும். ஆனால் விம்பிள்டனில் இது போன்ற ஒரு அழுத்தத்தை கால் இறுதியில் இருந்து இறுதிப்போட்டி வரை வீரர்கள் எதிர்கொள்கிறார்கள்" என்று விராட் கோலி பாராட்டியுள்ளார்.