லண்டன்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் பிரபலம் வாய்ந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடர் தொடங்கியுள்ளது. புல்தரை மைதானங்களில் நடக்கும் ஒரேயொரு டென்னிஸ் தொடரான இதில் வெற்றிபெறுவது ஒவ்வொரு டென்னிஸ் வீரரின் லட்சியமாக இருக்கும்.
அதற்காக டென்னிஸ் வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். நடப்பு ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இருந்து ரபேல் நடால் விலகியுள்ள நிலையில், ஜோகோவிச் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 24வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை மேல் சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவருக்கு இளம் வீரரான கார்லஸ் அல்காரஸ் கடுமையான சவாலளிக்க காத்திருக்கிறார்.

இந்த நிலையில் விம்பிள்டன் நிர்வாகம் தரப்பில் வித்தியாசமான எச்சரிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் கோர்ட் நம்பர் 12-க்கு அருகில் "அமைதி அறை" என்று ஒன்று நீண்ட ஆண்டுகளாக இருந்து வருகிறது. பெரும்பாலும் மக்கள் அங்கு தியானத்தில் ஈடுபடவும், பிரார்த்தனை செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல் குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள் அந்த அமைதி அறையை பயன்படுத்தலாம். ஆனால் கடந்த ஆண்டு காதலர்கள் உடலுறவில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை சாட்சியுடன் விம்பிள்டன் நிர்வாகிகள் கண்டுபிடித்தனர். இதனால் "அமைதி அறை"யில் எளிதாக தனிமையில் இருக்கும் சூழல் அமைந்துள்ளதால், இளைஞர்கள் சிலர் தங்களின் சொந்த காரணங்களுக்காக பயன்படுத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் விம்பிள்டன் நிர்வாகிகள் தரப்பில் கடந்த ஆண்டிலேயே அமைதிக்கான அறையை செக்ஸ் வைத்துக் கொள்ள பயன்படுத்த கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அந்த எச்சரிக்கையை யாரும் கண்டுகொள்ளவில்லை என்று தெரிய வந்துள்ளது.
இதனால் இங்கிலாந்து டென்னிஸ் சங்க தலைவர் போல்டன் பேசுகையில், விம்பிள்டன் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள அமைதி அறை புனிதமானது. அதற்கு மக்கள் மதிப்பளிக்க வேண்டும். அதனை இந்த விம்பிள்டன் தொடரில் உறுதி செய்வோம் என்று தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் பார்க்கப்படும் விம்பிள்டன் தொடரை நடத்தி வரும் நிர்வாகிகள், இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீவிர நடவடிக்கை எடுக்க முடியாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.