விம்பிள்டன் டென்னிஸ் - முத்தம் கொடுத்த ஜோகோவிச்.. இறுதிப் போட்டிக்கு தகுதி.. புதிய சாதனை !
லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு 8வது முறையாக செர்பிய வீரர் ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளார்.
ஏற்கனவே நடால் அரையிறுதிப் போட்டியிலிருந்து விலகிய நிலையில் ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியாஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இந்த நிலையில் பிரிட்டன் வீரர் கேமரான் நொரியை ஜோகோவிச் எதிர்கொண்டார். உள்ளூர் வீரர் என்பதால் நொரிக்கு பெரும் ஆதரவு பார்வையாளர்கள் மத்தியில் இருந்தது.

பிரிட்டன் வீரர்
2017ஆம் ஆண்டுக்கு பிறகு பாரம்பரிய விம்பிள்டன் தொடரில் அரைறயிறுதிப் போட்டிக்கு பிரிட்டன் வீரர் ஒரு வர் விளையாடுகிறார். இதில் வென்றால், விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் 5வது வீரர் என்ற பெருமையை அவர் பெற இருந்ததால், அவருக்கு, பிரிட்டன் ரசிகர்கள் முழு ஆதரவு கொடுத்தனர்.இது ஜோகோவிச்சுக்கு மண்டை சூட்டை தந்தது.

முதலில் சறுக்கல்
ரசிகர்களின் ஆதரவு இருந்ததால் முதல் செட்டில் நொரி அதிரடியாக விளையாடி புள்ளிகளை பெற்றார். இதனால் முதல் செட்டை ஜோகோவிச் 2க்கு6 என்ற கணக்கில் இழந்தார். கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிகளில் சமீப காலமாக எம்ஜிஆர் போல் முதலில அடி வாங்கும் ஜோகோவிச், பின்னர் தனது அதிரடியை காட்டுவார்.

ரசிகர்களுக்கு முத்தம்
இதனையடுத்து, அடுத்த மூன்று செட்களையும் ஜோகோவிச் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கைப்பற்றினார். 2 மணி நேரம் 34 நிமிடம் நீடித்த இந்தப் போட்டியில் ஜோகோவிச், 2க்கு6, 6க்கு3, 6க்கு2, 6க்கு4 என்ற செட் கணக்கில் வென்று 8வது முறையாக விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். போட்டியில் வென்றதும், தமக்கு எதிராக செயல்பட்ட ரசிகர்களை வெறுப்பேற்றும் வகையில் ஜோகோவிச் காற்றில் முத்தம் கொடுத்து வெறுப்பேற்றினார்.

ஜோகோவிச் சாதனை
இதன் மூலம் கிராண்ட் ஸ்லாம் வரலாற்றில் அதிக முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள வீரர் என்ற பெருமையை ஜோகோவிச் பெற்றார். ஜோகோவிச் 31 முறையும், ரோஜர் பெடரர் 30 முறையும் இறுதிப் போட்டியில் விளையாடி இருக்கின்றனர். ஞாயிற்றுகிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் நிக் கிர்கியாஸை ஜோகோவிச் தனது 21வது பட்டத்திற்காக எதிர்கொள்ள உள்ளார்.


Click it and Unblock the Notifications