லண்டன் : பிரபல டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச் ரசிகர்களை கடுமையாக சாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டென்னிஸ் உலகின் பாரம்பரிய கிராண்ட் ஸ்லாம் தொடராக கருதப்படும் விம்பிள்டன் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்று போட்டியில் டென்மார்க் வீரர் ஹோல்கர் ரூனேவை, செர்பியாவின் ஜோகோவிச் எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் அதிரடியாக விளையாடி ஆறுக்கு மூன்று, ஆறுக்கு நான்கு, ஆறுக்கு இரண்டு என்ற நேரடி செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இந்தப் போட்டியின் போது ரசிகர்கள் ரூனே என்ற பெயரை (Ruunnnee) கத்தி கொண்டு இருந்தனர். அது ஜோகோவிச்சுக்கு எதிர்ப்பு குரல் போல் (Booo என்று கத்துவது வீரர்களை அவமதிப்பதற்காக போடும் சத்தம்) கேட்டது. இதனால் ஜோகோவிச் கடுப்படைந்தார்.இந்த நிலையில் போட்டி முடிந்த பிறகு களத்தில் பேசிய ஜோகோவிச் இங்கு வந்திருக்கும் மரியாதைக்குரிய ரசிகர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
மற்றொரு தரப்பின் ரசிகர்கள் களத்தில் விளையாடும் வீரரை அவமதிக்கும் வகையில் செயல்பட்டீர்கள். அவர்களுக்கு என்னுடைய குட் நைட் என்று ( Goooo night) இழுத்து சொன்னார். அப்போது குறிக்கிட்ட தொலைக்காட்சி வர்ணனையாளர் ரசிகர்கள் ரூனே என்று தான் கத்தினார்கள். அது உங்களது காதில் மாறி விழுந்து விட்டது என்று கூறினார்.
அதற்கு பதிலடி கொடுத்த ஜோகோவிச், இல்லை அவர்கள் எனக்கு எதிர்ப்பு குரல் தான் தெரிவித்தார்கள். நான் இதை கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் ரூனேக்கு ஆதரவாக குரல் கொடுக்கலாம். ஆனால் நீங்கள் என்னை அவமதிக்கும் வகையில் தான் செயல்பட்டீர்கள்.
நான் 20 ஆண்டுகளுக்கு மேல் சர்வதேச டென்னிஸ் போட்டியில் விளையாடி வந்து கொண்டிருக்கின்றேன். எனக்கு ரசிகர்கள் என்னென்ன செய்வார்கள் என்று கண்டிப்பாக தெரியும். இந்த நுணுக்கங்கள் எல்லாம் எப்படி உதவும் என்றும் தெரியும். ஆனால் என்னுடைய கவனம் எல்லாம் டென்னிஸ் போட்டியை பார்ப்பதற்காக பணம் செலுத்தி வந்திருக்கக்கூடிய மரியாதைக்குரிய ரசிகர்கள் மீது தான் இருந்தது.
இதைவிட மோசமான ரசிகர்களின் எதிர்ப்புக் குரலுக்கு மத்தியில் நான் விளையாடி இருக்கின்றேன். என்னை நம்புங்கள் உங்களால் என்னை ஒன்னும் செய்ய முடியாது. இதைத் தொடர்ந்து பேசிய ஜோகோவிச், ரசிகர்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு அளிக்கலாம். ஆனால் அதற்கான எல்லையை நீங்கள் மீறினால் நிச்சயம் நானும் எதிர்வினை ஆற்றுவேன்.
இனி இதுபோன்ற அவமரியாதையாக வீரர்களை நடத்தும் ரசிகர்களை வெளியேற்ற வேண்டும் என நான் நினைக்கின்றேன். ஜோகோவிச் தற்போது 60வது முறையாக கிராண்ட் ஸ்லாமின் கால் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறார். விம்பிள்டன் பொருத்தவரை இது 15 வது முறையாகும். ஜோகோவிச் ஏழு முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறார். தற்போது ஒட்டுமொத்தமாக 25வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முனைப்பில் ஜோகோவிச் உள்ளார்.