லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெறும் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் 7 முறை சாம்பியன் ஆன ஜோகோவிச்சும், 20 வயதான ஸ்பெயின் இளம் வீரர் கார்லஸ் அல்காரசும் மோத உள்ளனர்.
36 வயதான ஜோகோவிச் தனது எட்டாவது விம்பிள்டன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறார். இன்றைய ஆட்டத்தில் ஜோகோவிச் வெற்றி பெற்றால் அதிக முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற மார்கரேட் கோர்ட்டின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்வார்.

மேலும் விம்பிள்டனில் எட்டு முறை பட்டம் என்ற ரோஜர் ஃபெடரரின் சாதனையையும் ஜோகோவிச் சமன் செய்ய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. நடப்பாண்டில் ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன்,பிரெஞ்சு ஓபன் ஆகிய பட்டங்களை வென்று நடாலின் 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனையை முறியடித்திருக்கிறார். அதே சமயம் ஸ்பெயின் வீரர் கார்லஸ் ஆல்காரசும் சாதாரண வீரர் கிடையாது. நடப்பாண்டில் ஏடிபி டென்னிஸ் தொடரில் 5 பட்டங்களை வென்று அசத்தியிருக்கிறார்.
இதன் மூலம் உலகின் முதல் நிலை வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கும் அல்காரஸ், நடப்பு ஆண்டில் அதிக வெற்றிகளை பெற்ற வீரர் என்ற பெருமையும் பெற்றிருக்கிறார். அல்காரஸ் காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் விளையாடவில்லை. எனினும் பிரெஞ்ச் ஓபன் தொடரில் அரையிறுதி போட்டி வரை வந்த அல்காரஸ் ஜோகோவிச்சிடம் தோல்வியை தழுவினார். அல்காரஸ் ஏற்கனவே அமெரிக்க ஓபன் பட்டத்தை கடந்த ஆண்டு வெற்றி பெற்றிருக்கிறார். ஜோகோவிச் தொடர்ந்து நான்கு முறை விம்பிள்டன் பட்டத்தை வெற்றி பெற்றிருக்கிறார்.
விம்பிள்டனில் அவர் தொடர்ந்து 34 போட்டிகளில் வென்று இருக்கிறார். ஆனால் அல்காரஸ் தற்போது தான் முதல்முறையாக விம்பிள்டன் பைனலில் களம் இறங்குகிறார். ஜோகோவிச் கடைசியாக விளையாடிய எட்டு கிராண்ட்ஸ்லாம் தொடரில் ஆறு முறை சாம்பியன் பட்டத்தை வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இதனால் ஜோகோவிச்சின் ஆதிக்கம் தொடருமா? இல்லை டென்னிசில் புதிய அரசனாக கார்லஸ் அல்காரஸ் விளங்குவாரா என்பது இன்று தெரிந்துவிடும். இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு நடைபெறுகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இந்த போட்டியை பார்க்கலாம்.