டெல்லி: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய பாட்மின்டன் குழுவில், தேசிய அணி பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்தின் 15 வயது மகள் காயத்ரியும் இடம் பெற்றுள்ளார். முதல் முறையாக இந்திய அணிக்காக அவர் விளையாட உள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் வரும் 18ம் தேதி துவங்குகிறது. இதில் பாட்மின்டன் பிரிவுக்கு, இந்தியாவின் நட்சத்திரங்கள் சாய்னா நெஹ்வால், பிவி சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் உள்பட 20 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இந்திய அணியின் பயிற்சியாளரான புல்லேலா கோபிசந்தின் மகள் காயத்ரியும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இந்திய சீனியர் அணிக்காக முதல் முறையாக விளையாட உள்ளார், 15 வயதாகும் காயத்ரி.
இரண்டு சீனியர் ரேங்கிங் போட்டியில் சிறப்பாக விளையாடியதன் அடிப்படையில் காயத்ரி, அஷ்மிதா சாலிஹா, சாய் உத்தேஜிதா ராவ், ஆகர்ஷ் கஷ்யப், ருதுபூர்ணா பாண்டா, ஆர்த்தி சாரா ஆகியோர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது 17 வயதுக்குட்பட்டோருக்கான தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார் காயத்ரி. ஜூனியர் பிரிவில் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
பாட்மின்டன் என்பது காயத்ரியின் ரத்தத்துடன் இணைந்த ஒன்று. தந்தை கோபிசந்த், ஆல் இங்கிலாந்து பட்டம் உள்பட பல போட்டிகளில் வென்றவர். சாய்னா நெஹ்வால், பிவி சிந்து, ஸ்ரீகாந்து ஆகியோரை உருவாக்கியவர் கோபிசந்த்.
தாய் பி.வி.வி. லட்சுமியும் பாட்மின்டன் வீராங்கனை. 8 முறை தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றவர். 1996ல் ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் பங்கேற்றவர். காயத்ரியின் தம்பி சாய் விஷ்ணுவும் 15 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பாட்மின்டன் விளையாடி வருகிறார்.