மும்பை: உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணியின் மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று ரோகித் சர்மாவின் பேட்டியின் மூலம் தெரிய வந்துள்ளது.
உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணியை கட்டமைப்பதில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரும் தீவிரமாக உள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் காயமடைந்துள்ளதால், மாற்று வீரர்களை தயார் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வேறு வழியில்ல்லாமல் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இதில் சஞ்சு சாம்சன் தனது பேட்டிங்கை கிடைத்த வாய்ப்புகளில் பயன்படுத்தி வந்திருக்கிறார். ஆனால் சூர்யகுமார் யாதவ் ஒருநாள் கிரிக்கெட்டை எப்படி விளையாட வேண்டும் என்று பிடிபடாமலேயே ஆட்டமிழந்து வருகிறார். இதனால் சூர்யகுமார் யாதவை இந்திய அணியில் சேர்ப்பது சொந்த கையில் சூனியம் வைப்பதற்கு சமமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவிற்கு வாய்ப்புகளை அள்ளி கொடுப்பதை ஞாயப்படுத்தி பேசி இருக்கிறார்.
மும்பையில் செய்தியாளர்களை சந்தித்து ரோகித் சர்மா பேசுகையில், சூர்யகுமார் யாதவின் உழைப்பு அபாரமானது. அவர் ஒருநாள் கிரிக்கெட்டை புரிந்துகொள்வதற்காக, அனுபவம் வாய்ந்த வீரர்கள், முன்னாள் வீரர்களிடம் பேசி வருகிறார். ஐபிஎல் தொடரின் போது அவரால் தொடக்கத்தில் சிறப்பாக விளையாட முடியவில்லை. ஆனால் தொடரின் முடிவில் சூர்யகுமாரால் என்ன செய்ய முடிந்தது என்பதை அனைவரும் பார்த்தீர்கள். அதனால் அவருக்கு கூடுதல் வாய்ப்பை வழங்க வேண்டும் என்றே நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
அதேபோல் திலக் வர்மா நம்பிக்கையான வீரராக தெரிகிறார். அவருடன் இரு ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். அவரிடம் ரன்கள் சேர்க்க வேண்டும் என்ற பசி இருக்கிறது. அவருடன் எப்போதெல்லாம் பேசுகிறேனோ, அப்போது என்ன செய்ய வேண்டும், எப்படி ரன்கள் சேர்க்க வேண்டும் என்று திட்டத்துடன் இருக்கிறார் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.
ஆனால் பேக் அப் விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்சன் பற்றி ஒரு வார்த்தையை கூட ரோகித் சர்மா பேசவில்லை. இதனால் மும்பை அணியின் வீரர்கள் மீது ரோகித் சர்மாவுக்கு அதிக பாசம் இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.