பேசல்: உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக தங்கம் வென்றிருக்கிறார் இந்தியாவின் இளம் வீராங்கனை பி.வி. சிந்து.
சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் உலக பேட்மின்டன் போட்டிகள் நடைபெற்றன. போட்டியின் அரையிறுதியில் உலகின் 3ம் நிலை வீராங்கனை சீனாவின் சென் யுபெய்யை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார் இந்தியாவின் பி.வி. சிந்து.
இறுதி போட்டியில் அவர் ஜப்பானின் நோசோமி ஓகுஹாராவை எதிர்கொண்டார். இந்த போட்டி ரசிகர்களிடையே பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. காரணம் உலக பேட்மின்டன் தொடரில் ஒரு முறை கூட பதக்கத்தை பி.வி. சிந்து வென்றதில்லை.
எதிர்பார்ப்புகளுக்கு இடையே போட்டி தொடங்கியது. ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார் பி.வி.சிந்து. முதல் செட்டில் அற்புதமாக விளையாடினார். எதிரணி வீராங்கனையின் தவறுகளை எல்லாம் தமக்கு சாதகமான பாயிண்ட்டுகளாக மாற்றினார். முதல் செட் 21க்கு 7 என்று தம்வசப்படுத்தினார்.
2வது செட்டிலும் தமது ஆக்ரோஷத்தையும் விடவில்லை. அற்புத ஷாட்டுகளை அள்ளி, அதிரடியாக ஆடினார். விளைவு, அந்த செட்டும் சிந்துவின் வசமானது. 21க்கு 7 என்று செட் கணக்கில் அடித்து நொறுக்கி தங்க பதக்கத்தை தட்டிச் சென்றார்.
இந்த வெற்றியின் மூலம், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். முன்னதாக, அவர் ஏற்கெனவே 2 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களை வென்றிருந்தார். 24 வயது சிந்து, முதல் முறை உலக சாம்பியன் ஆகியிருப்பதால் நாடெங்கிலும் இருந்து அவருக் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.