மும்பை : வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் என்ற அளவுக்கு உயர்ந்து இருக்கிறார். கிரிக்கெட் உலகில் அனைத்து அணிகளாலும் மரியாதையாக பார்க்கப்படுகிறார்.
பும்ராவின் தனித்துவமான பந்துவீச்சு அவரை இன்று கிரிக்கெட் உலகின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது. ஆனால், அவரது இளமைக் காலத்தில் மிக மோசமான பொருளாதார சூழ்நிலையில் இருந்து தான் அவர் இந்த இடத்துக்கு வந்து இருக்கிறார்.

பும்ராவின் ஐந்து வயதில் அவரது தந்தை மறைந்து விட்டார். அவரது தாய் தல்ஜித் கவுர் வேலைக்கு போய் குடும்பத்தை காப்பாற்றி இருக்கிறார். அதனால் பொருளாதார சிக்கலில் தான் அவரது சிறுவயது முழுவதும் கழிந்துள்ளது. அது பற்றி அவர் முன்பு ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.
"அப்போது எதையும் வாங்க முடியாத நிலையில் இருந்தோம். நான் கிரிக்கெட் ஆடத் துவங்கிய போது என்னிடம் சாதாரண ஷூ ஒரு ஜோடியும், இரண்டு டி ஷர்ட்களும் மட்டுமே இருந்தன. தினமும் போட்டிருக்கும் டி ஷர்ட்டை துவைத்து மீண்டும், மீண்டும் பயன்படுத்தி வந்தேன்." என்றார் பும்ரா. அந்த நிலையில் தான் அவரது இளமைப் பருவம் கழிந்துள்ளது.
யாராவது நம்மை பெரிய கிரிக்கெட் கிளப்களில், மாநில அணியில் தேர்வு செய்ய மாட்டார்களா? என ஏக்கத்துடன் அவர் இருந்திருக்கிறார். ஒரு முறை கிரிக்கெட் ஆட நைக் ஷூ வேண்டும் என தன் தாயிடம் கேட்டுள்ளார். ஆனால், அன்று இருந்த குடும்ப சூழ்நிலையில் அவரால் அதை வாங்கிக் கொடுக்க முடியவில்லை. அப்போது நானே சம்பாதித்து வாங்குவேன் என உறுதி எடுத்த பும்ரா, பின்னர் அதை செய்தும் காட்டி இருக்கிறார்.
பும்ரா தன் தனித்துவமான பந்துவீச்சால் கொஞ்சம், கொஞ்சமாக மும்பை கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டுக் கொண்டு இருந்த நேரம் அது. அப்போது யாராவது வந்து நம் வாழ்க்கையை அப்படியே தலைகீழாக மாற்ற மாட்டார்களா? என அவர் கண்ட சிறுவயது கனவு நிறைவேறியது. மும்பை இந்தியன்ஸ் அணியின் தேர்வாளர்கள் திறமையான வீரர்களை அடையாளம் கண்டு வந்த போது அவர்கள் கண்களில் பும்ரா சிக்கினார்.
அவரது தனித்துவமான பந்துவீசும் பாணி, மும்பை இந்தியன்ஸ் அணியில் அப்போது முதன்மை வேகப் பந்துவீச்சாளராக இருந்த இலங்கையின் லசித் மலிங்கா போலவே இருந்தது அவர்களை ஈர்த்தது. 2013 முதல் பும்ராவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பு பயிற்சிகளை வழங்கியது. அங்கிருந்து பும்ரா இந்திய அணியின் தவிர்க்க முடியாத பந்துவீச்சாளராக மாறினார். முயற்சி மற்றும் பயிற்சி இருந்தால் எந்த வறுமையையும் உடைத்து மேலே வரலாம் என்பதற்கு பும்ரா பெரிய எடுத்துக்காட்டாக இருக்கிறார்.