மும்பை: 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோலி அறிமுகமானார். இன்றுடன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 16ஆம் ஆண்டு தொடங்கியுள்ளது. இதனையொட்டி விராட் கோலியின் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
இந்த 16 ஆண்டுகளில் விராட் கோலி இந்திய அணிக்காக எண்ணற்ற சாதனைகளை படைத்திருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் படைத்த சாதனைகளையும் முறியடித்து பலருக்கும் உத்வேகம் அளித்துள்ளார். அந்த வகையில் விராட் கோலி படைத்துள்ள 3 சாதனைகள் யாராலும் இனி படைக்க முடியாது என்று பார்க்கப்படுகிறது.

இதுவரை 295 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். உலகக்கோப்பை தொடரின் போது நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி தனது 50வது அரைசதத்தை விளாசி அசத்தினார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்தார்.
அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்களை விளாசிய விராட் கோலி சாதனை படைத்திருக்கிறார். இதுவரை இலங்கை அணிக்கு எதிராக 56 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 10 சதங்களை அடித்துள்ளார். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடியுள்ள 43 ஒருநாள் போட்டிகளில் 9 சதங்களை விளாசி சாதனை படைத்துள்ளார். இதில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் 7 சதங்களை விளாசி இருக்கிறார்.
அதேபோல் உலகக்கோப்பை தொடரில் 700 ரன்களை விளாசிய முதல் வீரர் என்ற புதிய வரலாற்றை விராட் கோலி படைத்துள்ளார். கடந்த உலகக்கோப்பை தொடரில் மட்டும் விராட் கோலி 3 சதங்கள், 6 அரைசதங்கள் உட்பட மொத்தமாக 765 ரன்களை விளாசியுள்ளார். இதற்கு முன்பாக ரோஹித் சர்மா முதலிடத்தில் இருந்தார். அவரின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் அதிக ரன்கள் சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு இன்னும் 4,500 ரன்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.