'அண்ணனின்' 199வது போட்டியை முன்னிட்டு அடுத்தபடியாக..199 கிலோ ரோஜா இதழ் தூவப்படும்...!
கொல்கத்தா: சச்சின் டெண்டுல்கர் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் தனது 199வது டெஸ்ட் போட்டியை விளையாடும்போது அவர் மீது 199 கிலோ ரோஜா இதழ்கள் ஹெலிகாப்டர் மூலம் தூவப்படும். மேலும் 199 பலூன் கொத்துகள் பறக்கவிடப்படும்.
சச்சின் டெண்டுல்கர் இதுவரை 198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அடுத்த மாதம் நடக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடவிருக்கிறார். இந்நிலையில் தனது 200வது டெஸ்ட் போட்டியோடு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் சச்சின்.

மாஸ்க்
199வது டெஸ்ட் போட்டியின் முதல் மற்றும் இரண்டாவது நாள் அன்று பார்வையாளர்களுக்கு டெண்டுல்கரின் படம் போட்ட மாஸ்க் மற்றும் ப்ளக்கார்டுகள் வழங்கப்படும்.

ப்ளக்கார்டு
முதல் நாளில் போட்டியைக் காணும் 65,000 பேர் மாஸ்குகளை போட்டு டெண்டுல்கரை வாழ்த்துவார்கள். மறுநாள் டெண்டுல்கரை புகழ்ந்து வாசகங்கள் அடங்கிய ப்ளக்கார்டுகளை பார்வையாளர்கள் பிடித்திருப்பார்கள்.

பலூன்
போட்டியின் மூன்றாவது நாள் அன்று ஈடன் கார்டனில் இருந்து 199 கொத்து பலூன்கள் பறக்கவிடப்படும். பலூன்களில் டெண்டுல்கரின் போட்டோவும், அவரை புகழ்ந்து எழுதிய வாசகங்களும் இருக்கும்.

புத்தகம், ரோஜா இதழ்கள்
நான்காவது நாள் அன்று பிரபலங்கள் டெண்டுல்கரை பற்றி எழுதியவைகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்படும். ஐந்தாவது நாளில் ஹெலிகாப்டர் மூலம் சச்சின் மீது 199 கிலோ ரோஜா இதழ்கள் தூவப்படும்.

புகைப்பட கண்காட்சி
பல தரப்பட்ட நேரங்களில் எடுக்கப்பட்ட சச்சினின் புகைப்படங்களை வைத்து ஈடன் கார்டன் அருகில் உள்ள இடத்தில் போட்டிகள் நடக்கும் 5 நாட்களும் கண்காட்சி நடத்தப்படும்.

டிக்கெட்டுகள்
ஈடன் கார்டன் போட்டிக்கு வழங்கப்படும் டிக்கெட்டுகளில் சச்சினின் புகைப்படம் மற்றும் ஆட்டோகிராப் இருக்கும். முதல் நாள் போட்டிக்கான டிக்கெட்டில் கிரிக்கெட் விளையாடத் துவங்கிய சிறுவன் சச்சினின் புகைப்படம் இருக்கும். இரண்டாவது நாள் போட்டிக்கான டிக்கெட்டில் சச்சின் பேட்டை உயர்த்தி பிடிக்கும் புகைப்படம் இருக்கும். மீதமுள்ள 3 நாட்களுக்கான டிக்கெட்டுகளில் சச்சின் விளையாடும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இருக்கும்.


Click it and Unblock the Notifications