போர்ட் ஆப் ஸ்பெயின்: இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் நடுவேயான முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது.
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடுவதற்காக மேற்கு இந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்றது. டிரினிடாட்டின், போர்ட் ஆப் ஸ்பெயினில் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஆட்டம் துவங்கியது.
டாசில் வென்ற மே.இ.தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் இந்தியாவை முதலில் பேட் செய்ய அழைத்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு சிறப்பான துவக்கம் தந்த ரகானே 62 ரன்னிலும், தவான் 87 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர். அடுத்து கோஹ்லியுடன் யுவராஜ் சிங் ஜோடி சேர்ந்தார். 10 பந்துகளை சந்தித்த யுவராஜ் 4 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். 5வது வீரராக டோணி களமிறங்கினார.
இதனிடையே 39.2 ஓவர் நடந்துகொண்டிருந்தபோது திடீரென மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் பாதியிலே நிறுத்தப்பட்டது. அப்போது இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து 199 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் கோஹ்லி 32 ரன்னிலும் டோணி 9 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 26 ஓவர்களில் 194 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் போட்டி நடத்தமுடியாத சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
இவ்விரு அணிகள் நடுவேயான, 2வது ஒருநாள் போட்டி ஜூன் 25ம் தேதி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. சாம்பியன்ஸ் டிராபி பைனலில் பாகிஸ்தானிடம் அவமானகரமான தோல்வியடைந்த கோஹ்லி அணி, சமீபத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியொன்றில் ஆப்கனிடம் தோல்வி கண்ட மேற்கு இந்திய தீவுகள் போன்ற குட்டி அணியை வென்று தனது கோபத்தை தீர்த்துக்கொள்ளும் என நம்பலாம்.