ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுலின் அசத்தல் சதம் உதவியோடு இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. களமிறங்கிய முதல் ஒருநாள் போட்டியிலேயே சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ராகுல் பெற்றார்.
மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்காக டோணி தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இன்றைய முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 168 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

டாஸ் வென்று முதலில் பந்து வீசிய இந்தியா தனது முடிவை நியாயப்படுத்தும் வகையில் பந்து வீச்சில் அசத்தியது. ஆரம்பம் முதல் சீராக விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாப்வே எல்டன் சிக்கும்புராவின் 41 ரன்கள் உதவியோடு ஆட்டத்தில் ஒரு பந்து மிச்சமிருந்த நிலையில் 168 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இந்திய தரப்பில் பும்ரா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 9.5 ஓவர்களில் 28 ரன்களை மட்டுமே அவர் விட்டுக்கொடுத்திருந்தார். தவல் குல்கர்னி மற்றும் பரிந்தர் ஷ்ரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஸ்பின்னர்களான அக்ஷர் பட்டேல் மற்றும் யுஸ்வேந்திரா சஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ராகுலும், கருண் நாயரும் களமிறங்கினர். நாயர் 7 ரன்களிலேயே வெளியேறிய போதும், அடுத்தாக களமிறங்கிய அம்பட்டி ராயுடுவுடன் ஜோடி சேர்ந்து, வெற்றி இலக்கை எட்டச் செய்தார் ராகுல்.
42.3வது ஓவரில் வெற்றிக்கு 2 ரன்களே தேவைப்பட்ட நிலையில், ராகுல் இமாலய சிக்சர் ஒன்றை விளாசி 100 ரன்னை தொட்டார். இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. மறுமுனையில் அம்பட்டி ராயுடு 62 ரன்களுடன் களத்தில் நின்றார்.
களமிறங்கிய முதல் ஒருநாள் போட்டியில் செஞ்சுரி அடித்த முதல் இந்திய வீரர் ராகுல்தான். முன்னதாக 2006ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சக கர்நாடக வீரர் ராபின் உத்தப்பா தனது முதல் ஒருநாள் போட்டியில் எடுத்த 86 ரன்கள்தான் அதிகபட்ச ரன்களாக இருந்தது.
இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. 2010ம் ஆண்டு ஜிம்பாப்வே தொடருக்கு சுரேஷ் ரெய்னா தலைமையில் சென்ற இந்திய அணி முத்தரப்பு தொடரில் தோல்வியை தழுவியது.
2013ம் ஆண்டு தொடரை விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வென்றது. 2015ம் ஆண்டில் ரஹானே தலைமையில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. தற்போது டோணி தலைமையில் இந்திய அணி பயணம் செய்து வருகிறது.
விராட் கோஹ்லி, ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், அஸ்வின், சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. முதலில் ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.