ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வேவை 126 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.
டாசில் வென்ற இந்தியா முதலில் பவுலிங்கை தேர்ந்தெடுத்த நிலையில், ஜிம்பாப்வே அணியின் உசி சிபாண்டா மட்டும் அதிகபட்சமாக 53 ரன்கள் எடுத்தார். பிற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டியதால், 34.3 ஓவர்களில் அந்த அணி 126 ரன்களில் 9 விக்கெட்டுகளை இழந்தது. சீன் வில்லியம்ஸ் காயத்தால் களமிறங்கவில்லை என்பதால் அதோடு ஜிம்பாப்வே இன்னிங்ஸ் முடிந்தது.

இந்திய அணி தரப்பில் யுசுவேந்திர சஹல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்ரன் மற்றும் குல்கர்ணி தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதையடுத்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா பேட்டிங்கை தொடங்கியது.
கடந்த போட்டியின் செஞ்சுரியன் ராகுலும், கரும் நாயரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி பொறுமையாக இன்னிங்சை கட்டி எழுப்பினர். அணியின் ஸ்கோர் 58-ஆக இருந்தபோது, சமு சிபாபா பந்து வீச்சில் ராகுல் 33 ரன்களில் பௌல்ட்டாகி வெளியேறினார். இதன்பிறகு சிகந்தர் ரஜா பந்து வீச்சில் கருண் நாயர் 39 ரன்களில் எல்.பி.டபிள்யூ முறையில் வெறியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 125-ஆக உயர்ந்திருந்தது.
26.5வது ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில், இந்தியா வெற்றி இலக்கை எட்டியது. தொடரையும் கைப்பற்றி அசத்தியது. அம்பட்டி ராயுடு 41 ரன்களுடனும், மனிஷ் பாண்டே சந்தித்த முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டிய நிலையிலும் களத்தில் நின்றனர்.
இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதால், 2014ல் இந்தியாவில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-1 என்ற வெற்றிக்கு பிறகு டோணி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் போட்டித்தொடரை வென்றதில்லை என்ற விமர்சனம் மாற்றி எழுதப்பட்டுள்ளது.