விசாகப்பட்டனம்: முதலில் விராத் கோஹ்லியும், பின்னர் கேப்டன் டோணியும் பொறுப்புடன் ஆடியதால் இந்தியா தனது 2வது ஒரு நாள் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக 7 விக்கெட் இழப்புக்கு 288 ரன்களை எடுத்தது.
விராத் கோஹ்லி சிறப்பாகி சதத்தைத் தொட காத்திருந்தபோது துரதிர்ஷ்டவசமாக 99 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மேற்கு இந்திய வீரர்களின் பந்து வீச்சால் தொய்வடைந்து கிடந்த இந்தியாவின் இன்னிங்ஸை சற்றே தூக்கி நிமிர்த்தியது கோஹ்லியின் ஆட்டம்தான். ஆனால் 99 ரன்களை எடுத்து 100வது ரன் எடுக்க அவர் காத்திருந்தபோது ரவி ராம்பால் பந்தில் வீழ்ந்து போனார்.
100 பந்துகளைச் சந்தித்த கோஹ்லி 99 ரன்கள் எடுத்தார். அவரும் யுவராஜ் சிங்கும் சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 50 ரன்களையும் சேர்த்தனர்.

விசாகப்பட்டனத்தில் இன்று இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான 2வது ஒரு நாள் போட்டி நடந்தது. இதில் டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் கேப்ன் பிராவோ, இந்தியாவை பேட் செய்யப் பணித்தார்.
தொடக்க ஜோடியான ரோஹித் சர்மாவும், ஷிகர் தவனும் அதிரடியாக ஆட எத்தனித்தபோது ரோஹித் சர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஷிகர் தவனும் 35 ரன்கள் எடுத்து வீராசாமி பெருமாள் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
ஷிகர் தவன் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில் விராத் கோஹ்லி நிலைத்து ஆடினார். யுவராஜ் சிங் 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்தவர்களில் சுரேஷ் ரெய்னா 23 ரன்கள் சேர்த்து வெளியேறினார். கோ்ஹ்லி போனதும் கேப்டன் டோணி அதிரடியாக ஆடினார். அவருக்குத் துணையாக அஸ்வின் இருந்தார். டோணி சிறப்பாக விளையாடி கடைசி நேரத்தில் தூக்கிக் கொடுத்ததால், இந்தியா 288 ரன்களை எட்ட முடிந்தது. 40 பந்துகளைச் சந்தித்த டோணி ஆட்டமிழக்காமல் 51 ரன்களைக் குவித்தார்.