புளோரிடா: இந்தியா- மேற்கிந்திய தீவுகளிடையேயான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் போட்டி பாதியிலேயே கைவிடப்பட்டது. இதனால், மேற்கிந்திய தீவுகள் அணி 1-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் மைதானத்தில் இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணிகளிடையே 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் போட்டி நடைபெற்றது.

நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.
இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. ஒளிபரப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆட்டம் 40 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது. இந்திய அணியில் முந்தைய ஆட்டத்தில் ஒரே ஓவரில் 5 சிக்சர்களை வாரி வழங்கிய ஸ்டூவர்ட் பின்னி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா இடம் பிடித்தார். இந்த போட்டியிலும் மேற்கிந்திய தீவுகள் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் இடம்பெறவில்லை.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் டோணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணியால் இந்த முறை ரன் மழை பொழிய முடியவில்லை. இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தனர்.
இறுதியில், 19.4 ஓவரில் மேற்கிந்திய தீவுகள் அணி 143 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் சார்லசை தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்களில் யாரும் 20 ரன்களை தாண்டவில்லை. சார்லஸ் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சளர் அமித் மிஸ்ரா 3 விக்கெட்களும், அஸ்வின், பும்ரா, முகமது ஷமி தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
பின்னர் 144 ரன்கள் எடுத்ததால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ரகானேவும் களத்தில் இருந்தனர். இந்தியா 2 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 15 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. சிறிது நேரத்தில் மழை பெய்து ஓய்ந்த நிலையில், ஈரப்பதத்தை காய வைக்க அந்த மைதானத்தில் போதிய வசதிகள் இல்லை என கூறப்படுகிறது.
இதனால், இப்போட்டியை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதன் மூலம் முதல் போட்டியில் வெற்றி வாகை சூடிய மேற்கிந்திய தீவுகள் அணி டி20 தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.