லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் வெற்றி பெற்று 13 ஆண்டு கால ஐசிசி கோப்பை கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் அது அவ்வளவு எளிதான காரியமாக தற்போது இல்லை.
ஏனென்றால் இங்கிலாந்து ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வது என்பது இந்திய அணிக்கு பின்னடைவாகவே இருக்கும். இந்த நிலையில் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு காத்திருக்கும் மூன்று சவால்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
இந்திய அணியில் தற்போது இருக்கும் முக்கிய பிரச்சினையே ரிஷப் பந்த் இல்லாததுதான். இந்தியா வெளிநாடுகளில் வெற்றி பெறுகிறது என்றால் அதற்கு முக்கிய காரணமாக ரிஷப் பந்த் தான் இருந்திருக்கிறார். இந்திய அணி பேட்டிங்கில் தடுமாறிய போதெல்லாம் அவர் கீழ் வரிசையில் இறங்கி அதிரடியாக விளையாடி அணியை காப்பாற்றி இருக்கிறார். தற்போது ரிஷப் பண்ட் இல்லாதது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அவருக்கு பதிலாக கே எல் ராகுல் விக்கெட் கீப்பராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் காயம் காரணமாக விலகி இருக்கிறார். இதனால் அனுபவம் இல்லாத கே.எஸ். பரத் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரை தான் இந்திய அணி பிளேயிங் லெவனில் சேர்க்கப் போகிறது. இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கப் போவது டாப் ஆறு வீரர்களின் பேட்டிங் தான். சுப்மன் கில், விராட் கோலி, ரகானே ஆகியோர் நல்ல பார்மில் இருந்தாலும் அவர்கள் அனைவருமே வெள்ளை நிறப் பந்தில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்திருக்கிறார்கள்.
ஆனால் சிவப்பு நிற பந்தில் விளையாடுவது மிகப்பெரிய சவாலாகும். டெஸ்ட் பயிற்சி இல்லாமல் அவர்கள் இருப்பது பெரிய மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. ஐபிஎல்லில் அதிரடியாக விளையாடிவிட்டு இங்கே பொறுமை காப்பது என்பது கொஞ்சம் கடினம் தான். ரோகித் சர்மா மிகவும் மோசமான பார்மில் இருப்பதால் அது இந்தியாவுக்கு தலைவலி தான். புஜாரா மட்டும்தான் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவத்துடன் இருக்கிறார். இந்திய அணிக்கு இருக்கும் மூன்றாவது பிரச்சனை வேப்பந்துவீச்சாளர்கள் ஓய்வே இன்றி இருப்பது தான்.
ஐபிஎல் தொடரில் இரண்டு மாதம் தீவிர பயிற்சிக்குப் பிறகு முகமது சமி, முகமது சிராஜ் ஆகியோர் களம் இறங்குகிறார்கள். இதனால் அவர்கள் எப்படி பந்து வீசப் போகிறார்கள் என்ற கேள்விக்குறி இருக்கிறது. மேலும் ஐபிஎல் போட்டிகளில் பந்து வீசும் முறைக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்து வீசும் முறைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. அதையும் அவர்கள் சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம். இதேபோன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தும் பும்ராவும் காயம் காரணமாக இல்லாதது இந்தியாவுக்கு குறையாக பார்க்கப்படுகிறது.