இந்தியாவின் டெத் பவுலர்கள் யார் ? 3 பேரால் மட்டுமே காப்பாற்ற முடியும்.. வெற்றி பெறுவது எப்படி ?
மொஹாலி : இந்திய கிரிக்கெட் அணி கடந்த சில டி20 போட்டிகளாக தோல்வியை தழுவி வருகிறது. இதற்கு காரணம் இந்தியாவின் கடைசி கட்ட ஓவர்களில் பந்துவீச்சு மிகவும் மோசமாக இருப்பதே என்று விமர்சனம் எழுந்துள்ளது.
ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தும் மோசமான பந்துவீச்சு காரணமாக, கோப்பையை இந்தியா தவறவிட்டது.
குறிப்பாக புவனேஸ்வர் குமார் போன்ற சீனியர் வீரர்கள் தொடர்ந்து கடைசி கட்டத்தில் ரன்களை வாரி வழங்குவது இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

ஆர்ஸ்தீப் சிங்
இந்த நிலையில் இந்திய அணியின் டெத் பவுலிங்கில் சிறந்து விளங்கும் வீரர்களை தற்போது காணலாம். இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஆர்ஸ்தீப் சிங் இறுதி கட்டத்தில் யாக்கர்களை சிறப்பாக வீசுகிறார். கடைசி ஓவரில் வெற்றிக்கு ஏழு ரன்கள் தேவைப்படும்போதும் கூட அவர் எதிரணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார். இதனால் ஆர்ஸ்தீப் சிங்கை இறுதி கட்ட ஓவர்களில் பயன்படுத்த இந்தியா முயற்சி செய்ய வேண்டும். நடப்பாண்டில் டெத் ஓவர்களில் குறைந்த ரன்கள் விட்டுக் கொடுத்த இந்திய வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார்.

முகமது ஷமி
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமி தற்போது கொரோனாவால் ஆஸ்திரேலியா தொடரில் விளையாடவில்லை. முகமது ஷமி பெரியதாக பாராட்டும் வகையில் டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும், தற்போது இருக்கின்ற பந்துவீச்சாளர்களுக்கு இவர் எவ்வளவோ பரவாயில்லை என்று எண்ணத்தை கொடுக்கும் ஒரு வீரர் ஆவார். முகமது ஷமி டெத் ஓவர்களில் குறைந்தபட்சம் 10 ரன்கள் கொடுத்தாலே அது இந்தியாவுக்கு வெற்றியாக தான் இருக்கும்.

பும்ரா
இந்திய அணியின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளரான பும்ரா தற்போது காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கூட விளையாடவில்லை. பும்ரா தனது அசுரத்தன யாக்கர்களால் எதிரணிக்கு கடும் சவாலை அளிக்கக்கூடிய வீரராக திகழ்வார். பும்ரா ஓவரில் இறுதி கட்டத்தில் பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிப்பது மிகவும் சிரமமாகும். அணிக்குள் பும்ரா வந்துவிட்டால் இந்திய அணியின் டெத் பவுலிங் பிரச்சனை தீர்ந்துவிடும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

யாருக்கு டெத் பவுலிங் ஓவர்?
ஆர்ஸ்தீப் சிங், பும்ரா, முகமது ஷமி என இந்தியா 3 வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தினால் மட்டுமே இந்தியாவுக்கு ஒரு அளவுக்கு வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. பவர் பிளேவில் முகமது ஷமி மற்றும் பும்ராவை பயன்படுத்திவிட்டு டெத் பவுலிங் எனப்படும் கடைசி ஐந்து ஓவர்களில் பும்ராவிடம் இரண்டு ஓவர் ஆர்ஸ்தீப் சிங்கிடம் இரண்டு ஓவர், முகமது ஷமியிடம் ஒரு ஓவர் என்று பிரித்து வழங்கினால் இந்தியா அந்தக் கட்டத்தில் அதிக ரன்கள் விட்டுக் கொடுக்காத நிலை ஏற்படும். இதைத் தவிர மற்ற ஓவர்களை ஹர்திக் பாண்டியா மற்றும் சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து சமாளிக்கலாம்.


Click it and Unblock the Notifications