சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக சென்னை அணி தொல்வியை சந்தித்துள்ளது. சென்னை அணியின் தோல்விக்கான காரணங்கள் பற்றி பார்க்கலாம்.
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலம் சென்னை அணி 9 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 4 தோல்விகளுடன் உள்ளது. அதுமட்டுமல்லாமல் நடப்பு ஐபிஎல் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இரு போட்டிகளில் சென்னை அணி தோல்வியடைந்துள்ளது.

இதனால் சென்னை அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் பிரச்சனைகள் சந்திக்கும் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்ததற்கான 3 விஷயங்களில் தவறு செய்ததே காரணமாக அமைந்துள்ளது. முதல் காரணம் சென்னை அணியின் பவர் பிளே பவுலிங். இன்றையப் போட்டியில் பஞ்சாப் அணி பவர் பிளேவில் மட்டும் 62 ரன்களை குவித்தது. 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாலும், சென்னை அணியை விடவும் பஞ்சாப் அணி அதிக ரன்களை குவித்தது.
ஏற்கனவே ராஜஸ்தான் அணிக்கு எதிராகவும் பவர் பிளே ஓவர்களை மோசமாக வீசியதே காரணமாக அமைந்தது. இதனால் ஆகாஷ் சிங்கிற்கு பதிலாக தீபக் சஹர் அல்லது பென் ஸ்டோக்ஸை சென்னை அணி பயன்படுத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. அதேபோல் ஜடேஜாவின் பேட்டிங் ஒருநாள் போட்டிகளுக்கான பாணியில் அமைந்துள்ளது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் சரி, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் சரி, ஃபினிஷராக களமிறங்கும் ஜடேஜா முதல் 10 பந்துகளில் 100 ஸ்ட்ரைக் ரேட்டில் மட்டுமே ஆடுகிறார்.
இதனால் சென்னை அணி எட்ட வேண்டிய இலக்கை விடவும் 10 முதல் 15 ரன்கள் வரை குறைக்கிறது. இதனால் ஜடேஜாவுக்கு முன்பாக தோனி களமிறங்க வேண்டும். அதேபோல் இன்றையப் போட்டியில் எம்எஸ் தோனியும் கேப்டன்ஷியில் தவறான முடிவுகளை எடுத்தார். கடைசி 4 ஓவர்களில் 48 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற சூழலில், அந்த ஓவரை பதிரானாவிடம் கொடுத்திருக்க வேண்டும்.
மாறாக ஸ்பின்னரான ஜடேஜாவிடம் பந்தை கொடுத்தது, பஞ்சாப் அணிக்கு இலக்கை குறைக்க உதவியாக அமைந்தது. ஏனென்றால் ஜடேஜா வீசிய ஓவரில் 2 சிக்சர்கள் அடிக்கப்பட்டது. இதன் பின்னர் பதிரானா வீசிய முதல் பந்திலேயே சாம் கரண் போல்டாகி வெளியேறினார். ஒருவேளை 17வது ஓவரை பதிரானா வீசி இருந்தால், சாம் கரண் விக்கெட்டை முன்னதாகவே வீழ்த்தி இருக்க வாய்ப்புகள் உருவாகி இருக்கும்.