டோமினிக்கா : வெஸ்ட் இண்டீஸ் எதிரான முதல் டெஸ்ட் போட்டி இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக கருதப்படுகிறது. இனி சிறப்பாக விளையாடவில்லை என்றால் அணியில் இடம் கிடைக்காது என்பதை தேர்வு குழுவினர் புஜாராவை நீக்கியதில் இருந்து தெளிவாக சொல்லிவிட்டார்கள்.
இதனால் ரோகித் சர்மா,விராட் கோலி, ரஹானே போன்ற மூத்த வீரர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இளம் வீரர் ஜெய்ஸ்வாலுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இவர் புஜாராவுக்கு பதில் மூன்றாவது வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பயிற்சி ஆட்டத்தில் தொடக்க வீரராக விளையாடி அரை சதம் அடித்தார். இந்த நிலையில் ஜெய்ஸ்வால் ஏன் ஓப்பனிங் இறங்க வேண்டும் என்பதற்கான மூன்று காரணங்களை தற்போது பார்க்கலாம். சேவாக், கம்பீர் ஆகிய ஜோடிக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் நமக்கு ஒரு நல்ல ஜோடி அமையவில்லை.
முரளி விஜய், ஷிகர் தவான் போன்ற வீரர்கள் ஒரு அளவுக்கு நன்றாக விளையாடினாலும் ஒரே மாதிரியாக தொடர்ந்து ரன் சேர்க்க தடுமாறி வந்தனர். தற்போது உள்ள கில் ரோகித் சர்மா ஜோடி சொந்த மண்ணில் நன்றாக விளையாடினாலும் வெளிநாட்டு மண்ணில் தடுமாறி வருகிறது. இதனால் இளம் வீரர் ஒருவரை தொடக்க வீரராக பயன்படுத்தி அவருக்கு நீண்ட வாய்ப்பு வழங்கினால் எதிர்காலத்தில் இந்த பிரச்சனையை இந்தியாவால் தீர்க்க முடியும்.
உலகில் உள்ள அனைத்து அணிகளுமே பெரும்பாலும் இடது கை, வலது கை பேட்ஸ்மேன்களாக தொடக்க வீரர்களை களம் இறக்குகிறார்கள். இதற்கு காரணம் டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்படி பேட்ஸ்மேன்கள் களமிறங்கும் போது பந்துவீச்சாளர்கள் அதற்கு ஏற்றார் போல் மாற்றி பந்து வீச சிரமப்படுவார்கள். இதன் காரணமாக ஜெய்ஸ்வால் போன்ற இடது கை பேட்ஸ்மனும் ரோஹித் சர்மா போன்ற வலது கை பேட்ஸ்மனும் இடம்பெற்றால் அது எதிரணிக்கு நிச்சயம் சவாலை கொடுக்கும்.
கேப்டன்களும் பேட்ஸ்மேன்களுக்கு தகுந்த மாதிரி பில்டிங்கை மாற்றும்போது அவர்களுக்கு அழுத்தம் உண்டாகும். பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடக் கூடியவர். ஆனால் எதிரில் இருப்பவர்கள் கொஞ்சம் தடுமாறினால் ரோகித் சர்மாவுக்கு கூடுதல் அழுத்தம் ஏற்படும். இதுவே ஜெய்ஸ்வால் போன்று அதிரடியாக பவுண்டரிகளை விளாசினால் அது ரோகித் சர்மா போன்ற பேட்ஸ்மன்களுக்கு அழுத்தத்தை குறைக்கும்.
இதன் மூலம் முதல் விக்கெட்டுக்கு வேகமாக ரன்களையும் சேர்க்க முடியும். ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடினால் ரோகித் சர்மா அமைதி காத்து பெரிய ரன்களை அடிக்கலாம். இல்லையெனில் இருவருமே சேர்ந்து அதிரடியாக ஆடி நல்ல தொடக்கத்தை கொடுக்கலாம். இதன் காரணமாக ஜெய்ஸ்வாலை தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.