இந்திய அணி அறிவிப்பு
இந்திய அணி தனது முதல் போட்டியாக வரும் ஆகஸ்ட் 28ம் தேதியன்று பரம எதிரி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. டி20 உலகக்கோப்பை அடைந்த தோல்விக்காக இந்திய அணி பழிதீர்க்கவும் காத்துக்கொண்டுள்ளது. இந்நிலையில் ஆசிய கோப்பையில் இந்தியாவின் ப்ளேயிங் 11 எப்படி அமையும் என குழப்பம் எழுந்துள்ளது.
பேட்டிங் ஆர்டர்
இந்தியாவின் பேட்டிங்கை பொறுத்தவரையில் ஓப்பனிங்கில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் துணைக்கேப்டன் கே.எல்.ராகுல் ஆகியோர் விளையாடுவார்கள். இதன் பின்னர் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா என 6 வீரர்கள் ஏற்கனவே தங்களது இடத்தை உறுதி செய்துள்ளனர். இதில் தினேஷ் கார்த்திக்-ன் நிலைமை தான் கேள்வியை எழுப்பியுள்ளது.
என்ன பிரச்சினை
7வது வீரராக ரவீந்திர ஜடேஜா மற்றும் தினேஷ் கார்த்திக் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஒருவேளை இவர்கள் இருவருமே விளையாட வேண்டும் என்றால், ரவிச்சந்திரன் அஸ்வினின் இடத்தை அது பாதிக்கும். சுழற்பந்துவீச்சில் யுவேந்திர சாஹல் நிச்சயம் இடம்பெறுவார். இதனால் இந்தியா தினேஷ் கார்த்திக்-ஐ பயன்படுத்தினால் ஜடேஜா அல்லது அஸ்வினை நீக்க வேண்டும்.
கடும் போட்டி
ஏற்கனவே 3 வேகப்பந்துவீச்சாளர்களை வைத்துள்ள இந்திய அணி, சுழற்பந்துவீச்சிலும் ஒருவேளை 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கினால், தினேஷ் கார்த்திக்-ன் இடம் பறிபோகும். எனவே ஜடேஜா- அஸ்வின் - தினேஷ் கார்த்திக் என ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.