சச்சின் சாதனைகளை 'ஃபினிஷ்' செய்ய வந்தாச்சு கோஹ்லி.. இங்க பாருங்க ரெக்கார்ட!
மொகாலி: எப்படியோ, 2வது ஒருநாள் போட்டியில் ரன் சேசிங்கில் மொக்கை வாங்கிய இந்திய அணி, மொகாலியில் நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் தக்க பதிலடி கொடுத்துவிட்டது.
இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விராட் கோஹ்லி, 154 ரன்களை விளாசி, கடைசி வரை களம் காத்தார். கேப்டன் டோணி தன் பங்குக்கு 80 ரன்களை குவித்து வலுவான பார்ட்னர்ஷிப்பை வழங்கியதன் மூலம், 2வது ஒருநாள் போட்டியில் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடிக்கொண்டார்.
விராட் கோஹ்லியின் விஸ்வரூபத்தால், இந்திய அணி, 286 என்ற நியூசிலாந்து நிர்ணயித்த பெரிய இலக்கை கூட 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. இந்த ஆட்டத்தில் சதம் விளாசியதன் மூலம், சச்சின் சாதனையொன்றை சமன் செய்துள்ளார் விராட் கோஹ்லி.

இன்னொரு சச்சின்
சச்சினை போலவே எம்.ஆர்.எப் பேட்டை அதிக காலம் பயன்படுத்திவரும் விராட் கோஹ்லியின் நம்பகத்தன்மையும் சச்சினை போன்றதே. இதனால்தான், உலக அரங்கில் அவ்வப்போது மீடியாக்கள், சச்சினையும், கோஹ்லியையும் ஒப்பிட்டு எழுதிவருகின்றன. காலா காலத்திற்கு, இந்தியாவிலிருந்து ஒரு உலகத்தரமிக்க பேட்ஸ்மேன்கள் எப்படித்தான் உற்பத்தி செய்யப்படுகிறார்களோ..? என அவை ஆச்சரியக்குறியிட்டு செய்தியாக்குவது வழக்கம். ஆனால், கோஹ்லியோ தன்னை தனது கிரிக்கெட் ஆன்ம குருவோடு ஒப்பிட வேண்டாம் என்று தன்னடக்கம் காட்டுவார். என்னதான் தன்னடக்கமாக இருந்தாலும், புள்ளி விவரங்களோ, கோஹ்லி சச்சினை மிஞ்ச தொடங்கிவிட்டார் என்பதைத்தான் காட்டுகின்றன.

14வது சேசிங் சதம்
மொகாலி ஆட்டத்தில் கோஹ்லி ஒரு சாதனை செய்தார் என்று சொன்னோமல்லவா.. அது இதுதான். இந்தியா வெற்றிகரமாக ரன் சேஸ் செய்த ஒரு ஆட்டத்தில் கோஹ்லி விளாசிய 14வது சதம் இதுவாகும். சேஸிங் போட்டிகளில் மொத்தம் 59 இன்னிங்சுகளில் ஆடி அதில் 14 முறை செஞ்சுரியுடன் இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்தவர் விராட் கோஹ்லி. உலகின் சிறந்த பினிஷர் என்று இந்த புள்ளி விவரம் விராட் கோஹ்லி பற்றி கூறுகிறது.
சச்சினுக்கு அதிக ஆட்டம்
அதேநேரம் சச்சினும் 14 முறை சேசிங்கில் செஞ்சுரியுடன் இந்தியாவுக்கு வெற்றிதேடித் தந்துள்ளார். ஆனால் இதற்காக ச்சசின் ஆடிய ஆட்டங்கள் அதிகம். மொத்தம் அவர் 124 இன்னிங்சுகளில் ஆடிதான், அதில், 14 வெற்றி செஞ்சுரிகளை விளாச முடிந்தது. அந்த வகையில் கோஹ்லி, சச்சினைவிட ஒரு படி மேலே உள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

உலக அரங்கு
பாகிஸ்தானின் சையது அன்வர் 59 சேசிங்குகளில் 9ல் சதம் விளாசி தனது அணியை வெற்றிபெறச் செய்தவர். இலங்கையின் தில்ஷன் 60 போட்டிகளிலும், சனத் ஜெயசூர்யா 103 போட்டிகளிலும் 9 முறை சதம் அடித்து, தங்கள் அணிகளை சேசிங்கின்போது வெற்றிபெறச் செய்தவர்கள்.
செஞ்சுரி எண்ணிக்கை
மொத்த செஞ்சுரிகள் எண்ணிக்கையிலும், விராட் கோஹ்லி தற்போது 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். நேற்றைய போட்டியுடன் அவர் 26 செஞ்சுரிகள் விளாசியுள்ளார். இதில் 14 சதங்கள் சேசிங்கில் வந்தவை. மொத்த செஞ்சுரி பட்டியலில் சச்சின் 49 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். ரிக்கி பாண்டிங் 30 சதங்களுடன், 2வது இடத்திலும், சனத் ஜெயசூர்யா 28 சதங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். குமார் சங்ககாரா 25 சதங்களுடன் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். கோஹ்லி இதே வேகத்தில் சென்றால், வெகு விரைவில் சச்சினுக்கு அடுத்தபடியாக அதிக செஞ்சுரி அடித்த இரண்டாவது வீரர் என்ற பெயரை பெறுவார். அதன்பிறகு சச்சின் சதங்களும் அவருக்கு எட்டும் தூரமே.


Click it and Unblock the Notifications