இப்படி ஒரு மட்டமான பேட்டிங்கை சமீபத்தில் பார்த்தது இல்லை.. இங்கிலாந்து கேப்டன் புலம்பல்
பெங்களூர்: கடந்த 2 வருடங்களில் இங்கிலாந்து கண்ட மோசமான பேட்டிங் சரிவு இது என்று பெங்களூரில் நேற்று இந்திய அணியிடம் கடைசி டி20 போட்டியில் அடைந்த தோல்வி குறித்து புலம்பியுள்ளார் அந்த அணியின் கேப்டன் இயோன் மோர்கன்.
முதலில் பேட் செய்த இந்தியா 202 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இங்கிலாந்தும் வலுவான அடித்தளம் அமைத்து ரன்னை விரட்டியது. ஆனால் 119 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்த இங்கிலாந்து, 127 ரன்களுக்கு பரிதாபமாக ஆல்-அவுட் ஆனது.
கிரிக்கெட்டை கண்டுபிடித்ததாக பெருமைப்பட்டுக்கொள்ளும் இங்கிலாந்தால் இந்த பேட்டிங் சரிவை கற்பனை செய்து கூட பார்த்திருக்க முடியாது.

சுழற்பந்து
இங்கிலாந்தை இப்படி சுருட்டி வீச முக்கிய பங்கு வகித்தவர் இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் சஹல். அவர் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை சுருட்டினார்.

மோசமான சரிவு
போட்டிக்கு பிறகு மோர்கன் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 2 வருடங்களில் இங்கிலாந்து கண்ட மிக மோசமான பேட்டிங் சரிவு இது. முக்கியமான நேரத்தில் நன்கு செட்-ஆகியிருந்த இரு பேட்ஸ்மேன்கள் நடையை கட்டினர். இதன்பிறகு விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்துவிட்டன.

பிட்ச் பிரச்சினையில்லை
அதேநேரம், பெங்களூர் பிட்ச்சை குறை சொல்லமாட்டேன். மிக அருமையான பிட்ச். சிறு பவுண்டரி எல்லைகள்தான் இருந்தன. எனவே 203 என்ற இலக்கு எட்டக்கூடியதுதான். பந்து அருமையாக பேட்டுக்கு வந்து கொண்டிருந்தது.

பாராட்டு
அதேநேரம், சஹல் பந்து வீச்சை பாராட்டியே ஆக வேண்டும். நானும், ஜோ ரூட்டும் இன்னும் சில நிமிடங்கள் களத்தில் நின்றிருந்தால் ஆட்டத்தின் போக்கை மாற்றியிருக்க முடியும். இவ்வாறு மோர்கன் தெரிவித்தார். 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications