செயின்ட் லூசியா: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் அஸ்வின், சாஹா இருவரும் சதம் அடித்ததால் முதல் இன்னிங்சில் இந்திய அணி 353 ரன்கள் எடுத்தது.
விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளிடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 92 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது. கிங்ஸ்டனில் நடந்த 2-வது டெஸ்டிலும் இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் இருந்தது. மழை மற்றும் ரோஸ்டன் சேசின் (137 ரன்) நிலையான ஆட்டத்தால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பறிபோய் போட்டி டிராவில் முடிந்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி செயின்ட் லூசியாவில் உள்ள கிராஸ் தீவின் டேரன் சமி தேசிய மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. இதில் முதல் முதல் நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்தது. அஸ்வினும், சாகாவும் களத்தில் இருந்தனர். இரண்டாம் நாளான இன்று இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
265 பந்துகளில் அஸ்வின் சதம் அடித்தார். சர்வதேச டெஸ்ட் போட்டியில் அஸ்வின் அடித்த 4-வது சதம் இது ஆகும். முன்னதாக இந்த தொடரின் முதல் போட்டியிலும் அஸ்வின் சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஸ்வினை தொடர்ந்து சாஹாவும் 223 பந்துகளில் சதம் அடித்தார். இருப்பினும் 104 ரன்களில் சாகா ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரவிந்திர ஜடேஜா 6, புவனேஷ்வர் குமார் 0, ஏமாற்றினர். பொறுப்பாக ஆடிய அஸ்வின் 118 ரன்கள் எடுத்து கம்மின்ஸ் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். இஷாந்த் சர்மா டக் அவுட்டானார்.
முதல் இன்னிங்சில் இந்திய அணி 353 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. மேற்கிந்திய தீவுகள் அணிகள் சார்பில் ஜோசப், கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.