செயின்ட் லூசியா: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டெஸ்டின் 3 ஆம் நாள் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளிடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், 3-வது டெஸ்ட் போட்டி செயின்ட் லூசியாவில் உள்ள கிராஸ் தீவின் டேரன் சமி தேசிய மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் குவித்தது. இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய அஸ்வின் (118), சகா (115) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஜான்சன் 23 ரன்கள் எடுத்தார். பிராத் வெயிட் அரைசதம் கடந்தார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்திருந்தது. பிராத் வெயிட் (53), டேரன் பிராவோ (18), களத்தில் அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் அந்நாட்டு நேரப்படி காலை 10 மணிக்கு ஆரம்பிக்க இருந்தது. அப்போது கனமழை குறுக்கிட்டதால் ஒரு பந்துகூட வீசப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.