செயின்ட் லூசியா: புவனேஷ்வர் குமாரின் அபார பந்து வீச்சால் மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்சில் 225 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. சிறப்பாக பந்துவீசிய புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்டை கைப்பற்றினார்.
விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், 3-வது டெஸ்ட் போட்டி செயின்ட் லூசியாவில் உள்ள கிராஸ் தீவின் டேரன் சமி தேசிய மைதானத்தில் நடந்து வருகிறது.

3வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 353 ரன்கள் எடுத்தது. பின் தனது முதல் இன்னிங்சை துவக்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்தது. 3வது நாள் ஆட்டம் கனமழையின் காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் ரத்தானது.
இந்நிலையில் 4வது நாள் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் துவக்க வீரர் பிராத் வெயிட் (64) அரைசதம் எடுத்து கைகொடுத்தார். பிராவோ 29 ரன்களிலும், சாமுவேல்ஸ் 48 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். உணவு இடைவேளைக்கு பின் புவனேஷ்வர் வேகத்தில் திணறிய மேற்கிந்திய தீவுகள் அணி 225 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. புவனேஷ்வர் குமார் 5 விக்கெட் வீழ்த்தினார். இந்திய அணி 128 ரன்கள் முன்னிலை பெற்றது.