செயின்ட் லுாசியா: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய அணி 237 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. மேலும், தொடரை 2-0 கணக்கில் கைப்பற்றியது.
விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளிடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 92 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது. கிங்ஸ்டனில் நடந்த 2-வது டெஸ்டில், இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் இருந்தது. மழை மற்றும் ரோஸ்டன் சேசின் (137 ரன்) நிலையான ஆட்டத்தால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பறிபோய் போட்டி டிராவில் முடிந்தது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி செயின்ட் லூசியாவில் உள்ள கிராஸ் தீவின் டேரன் சமி தேசிய மைதானத்தில் நடந்தது. இதில், அஸ்வின், சாகா சதம் அடிக்க, முதல் இன்னிங்சில் இந்தியா 353 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.
இந்நிலையில் இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 346 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. ரகானே 78 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் கம்மின்ஸ் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். 346 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் களமிறங்கியது.
இந்தியாவின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியமால் 108 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் இந்தியா 237 ரன்களில் அபரா வெற்றி பெற்றது. அத்துடன் தொடரை 2-0 என கைப்பற்றியது.