“4 முக்கிய விஷயங்கள்” 2வது ஒருநாள் போட்டி.. இந்தியாவின் வெற்றிக்கு என்ன தேவை - முழு விவரம்!
பார்ல்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற 4 முக்கிய விஷயங்களை செய்ய வேண்டும்.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஏற்கனவே தென்னாப்பிரிக்க அணி 1 - 0 என முன்னிலை வகிக்கிறது.
வாழ்வா? சாவா? என்ற நிலையில் இந்திய அணி நாளை 2வது ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளது. இதற்காக வீரர்கள் தீவரமாக தயாராகி வருகின்றனர்.

டாஸ் மிக முக்கியம்
முதல் போட்டி நடைபெற்ற அதே பார்ல் நகரத்தின் மைதானத்தில் தான் 2வது ஒருநாள் போட்டியும் நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் டாஸ் வெல்ல வேண்டியது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு தான் இங்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் 2வதாக பேட்டிங் செய்யும் அணி 250+ ரன்களை விரட்டுவது இங்கு சாத்தியமானதே இல்லை.

ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்
ஓப்பனிங் வீரர்களில் யாரேனும் ஒருவர் கடைசி வரை நின்று ரன் உயர்த்த வேண்டும். கடந்த முதல் போட்டியில் இந்தியாவின் ஓப்பனர் கே.எல்.ராகுல் 12 ரன்களுக்கு வெளியேறிய போதும், கோலி - தவான் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். எனினும் மிடில் ஆர்டரில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன.

மிடில் ஆர்டர் சிக்கல்
ரிஷப் பண்ட் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் இயற்கையாகவே அதிரடியாக ஆடக்கூடியவர்கள். இவர்கள் இருவரும் அடுத்தடுத்த இடங்களில் பேட்டிங்கிற்கு இருந்தால் இருவருமே வேகமாக விக்கெட்டுகளை பறிகொடுக்க நேரிடும். எனவே வெங்கடேஷ் ஐயரின் பேட்டிங் ஆர்டரை மாற்ற வேண்டும், இல்லையென்றால் அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் போன்று நிதானமாக விளையாடக்கூடிய வீரர்களை சேர்க்க வேண்டும்.

பவுலிங்
இந்திய அணி பவுலிங் செய்யும் போது முதல் 15 ஓவர்களுக்குள் வேகப்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும். ஏனென்றால் ஆட்டத்தின் மிடில் ஓவர்களில் போது பந்து மெதுவாக நின்று வருகிறது. இதனால் எந்த அளவிற்கு ஸ்பின்னர்களுக்கு சாதகமாகிறதோ அந்த அளவிற்கு பேட்ஸ்மேன்களுக்கும் சாதகமாக அமையும்.


Click it and Unblock the Notifications