ரோகித் சர்மா
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடந்த தொடரில் ரோகித் சர்மா விளையாடவில்லை. இந்த நிலையில், அந்த அணிக்கு எதிராக 13 போட்டியில் விளையாடியுள்ள ரோகித் சர்மா, 362 ரன்களை விளாசியுள்ளார். இதில் ஒரு சதமும் அடங்கும். ரோகித் தொடர்ந்து அதிரடியாக விளையாடினால் மட்டுமே இந்தியாவுக்கு நல்ல தொடக்கம் அமையும்.
சுரேஷ் ரெய்னா
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டி20 போட்டியில் அதிக ரன்கள் அடித்த 2வது இந்திய வீரர் என்று பார்த்தால், அது சுரேஷ் ரெய்னா தான். இதுவரை 339 ரன்களை அடித்துள்ளார். 2010 டி20 உலகக்கேப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவே ரெய்னா சதம் அடித்து இருக்கிறார். ரெய்னாவின் இடத்தை சூர்யகுமார் யாதவ் இந்த தொடரில் நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விராட் கோலி
அனைத்து பட்டியலிலும் எப்போதும் முதலிடத்தில் இருக்கும் விராட் கோலி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டி20 போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 3வது இடத்தில் நீடிக்கிறார். இதுவரை 10 போட்டியில் விளையாடி 254 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார். கடந்த தொடரின் போது கோலி விளையாடவில்லை. இதனால் இம்முறை அதிக ரன்கள் அடித்து முதலிடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷிகர் தவான்
இந்திய அணியின் தொடக்க வீரராக இருந்த ஷிகர் தவான் 233 ரன்கள் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டி20 போட்டியில் அடித்திருக்கிறார். ஆனால் ஷிகர் தவான் நல்ல பார்மில் இருந்தும், அவருக்கு பதிலாக ராகுல் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் கோலி, ரோகித், ராகுல் என முன்று பேரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.