லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணி தொடர்ந்து இரண்டு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிச்சுற்று வரை வந்து இந்திய அணி தோல்வியை தழுவியது.
இந்திய அணியின் இந்த செயல்பாட்டிற்கு முக்கிய காரணம் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம். இரண்டு முறையும் ஃபைனல் இங்கிலாந்தில் நடைபெற்றது. இங்கிலாந்து ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் டெஸ்ட் விளையாட வேண்டும் என்றால் கிட்டதட்ட 20 நாட்களுக்கு முன்பே அங்கு சென்று இருக்க வேண்டும்.

இல்லையெனில் குறைந்தது ஒரு பயிற்சி ஆட்டத்திலாவது விளையாடிருக்க வேண்டும். இந்திய அணி ஒரு வாரத்திற்கு முன்பு தான் ஐபிஎல் தொடரை முடித்துவிட்டு இங்கிலாந்து வந்தார்கள். அப்படி இருக்கும்போது வெள்ளை நிற கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடிவிட்டு சிவப்பு நிற பந்தில் பொறுமை காத்து விளையாட வேண்டும் என்றால் அவர்களால் எப்படி முடியும்.
ரவி சாஸ்தி சொன்னது போல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான வீரர்களுக்கு மட்டும் ஒரு மாதம் முன்பு இங்கிலாந்து வந்து பயிற்சி செய்திருந்தால் இந்த அளவிற்கு கேவலமாக தோல்வி அடைந்திருக்க வாய்ப்பு இல்லை. இந்திய அணியின் தோல்விக்கு இரண்டாவது காரணம் கேப்டன் ரோகித் சர்மா ஆடுகளத்தை தவறாக கணித்து அணியில் பிளேயிங் லெவனில் இருந்து உலகில் நம்பர் ஒன் வீரரான அஸ்வினை களமிறக்க விட்டதுதான்.
இந்த டெஸ்டில் நாதன் லயன் ஐந்து விக்கெட்டுகளையும் ஜடேஜா நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது அஸ்வின் இருந்திருந்தால் நிச்சயமாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பார். இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு மூன்றாவது பெரிய காரணம் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் ட்ராவிஸ் ஹெட், ஸ்மித் ஜோடியை இந்தியா 250 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கவிட்டது தான்.
இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய அணி தடுமாறியது. ஆஸ்திரேலியா அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் பலர் இருக்கும் நிலையில் அஸ்வினை ரோகித் சர்மா சேர்த்து இருந்தால் இவ்வளவு ரன்களை அவர் அடிக்க விட்டிருக்க மாட்டார். இந்த தோல்விக்கு முக்கிய காரணம் இந்தியாவின் பேட்ஸ்மேன்கள் தான். டி20 விளையாடிய போதையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர்கள் அதிரடியாக ஆட முயற்சி செய்திருக்கிறார்கள்.
குறிப்பாக டாப் வரிசை வீரர்கள் எவரும் சரியாக விளையாடவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் ஓரளவுக்கு தங்களது இன்னிங்ஸை கட்டமைத்தாலும் தவறான ஷாட்டுகளை ஆடி பெரிய ஸ்கோரை அடிக்காமல் முக்கிய கட்டத்தில் ஆட்டம் இழந்தார்கள். குறிப்பாக நாதன் லயான் பந்துவீச்சில் ரோகித் சர்மா ஸ்வீப் ஷாட் ஆடியதெல்லாம் இது டி20 போட்டியா? இல்லை டெஸ்ட் போட்டியா என்று யோசிக்க வைத்தது.
இப்படி தொடர்ந்து தவறான அணுகுமுறையால் இந்திய அணி தோற்று வருகிறது ஆனால் இதற்கு யார் மீதும் பிசிசிஐ நடவடிக்கை எடுக்காது அப்படி எடுக்க வேண்டுமென்றால் கண்ணாடி முன்னாடி நின்று கொண்டு பிசிசிஐ தங்களைத் தாங்களே தண்டித்துக் கொள்ள வேண்டும்.