
தினேஷ் கார்த்திக் நீக்கம்
ரோகித் சர்மா முதல் முறையாக சரியான பிளேயிங் லெவனை தேர்வு செய்யாமல் சொதப்பி விட்டார். அதற்கு காரணம், ஜிடேஜா இல்லாததால் இடது கை பேட்ஸ்மேன் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக தினேஷ் கார்த்திக்கை அணியை விட்டு நீக்கியது மாபெரும் தவறு. ரிஷப் பண்ட் 12 பந்தில் 14 ரன்கள் சேர்க்க, தினேஷ் கார்த்திக் இருந்திருந்தால் இன்னும் ஸ்கோர் எகிறி இருக்கும். எப்போதுமே நம் பலத்தை மட்டுமே விளையாட வேண்டும் தவிர, பலவீனத்தை சரி செய்கிறேன் என்று கோட்டைவிட கூடாது.

ஜடேஜாக்கு மாற்று யார்?
எங்கள் அணியில் ஒவ்வொரு வீரருக்கும் மாற்று வீரர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று ரோகித்தும், டிராவிட்டும் மைக்கை பார்க்கும் போது எல்லாம் சொல்கிறார்கள். அப்படி இருக்க ஜடேஜா இல்லை என்றால் அவருக்கு மாற்று வீரராக அக்சர் பட்டேலை தேர்வு செய்து இருக்க வேண்டும். ஆனால் அதிலும் இந்திய அணி கோட்டைவிட்டது. தீபக் ஹூடாவை தேர்வு செய்தும், அவருக்கு ஒரு ஓவர் கூட தராதது மிகப் பெரிய ஏமாற்றம்.

சொதப்பிய பந்துவீச்சு
இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் பந்துவீச்சு தான். எதாவது ஒரு பந்துவீச்சாளர் சொதப்பினால், மற்றவர்களை வைத்து சமாளிக்கலாம். அணியில் இருக்கும் அனைத்து பந்துவீச்சாளர்களும் சொதப்பினால் கேப்டன் என்ன செய்வார். புவனேஸ்வர் குமார் ஆட்டத்தின் 19வது ஓவரில் ஒரு யாக்கர் பந்தை கூட வீசவில்லை. இதனால், அந்த ஒவரில் 19 ரன்கள் சென்றது. அவர் மட்டும் அதிகபட்சமாக 10 ரன்கள் கொடுத்திருந்தால் இந்தியா வென்று இருக்கும். புவனேஸ்வர் கமார், சாஹல் மற்றும் ஹர்திக் என மூன்று வீரர்களுமே இன்று 40 ரன்களுக்கு மேல் விட்டு கொடுத்தனர்.

மோசமான ஃபில்டிங்
இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் ஃபில்டிங். 18வது ஓவரில் ஆசிஃப் அலி கொடுத்த கேட்சை ஆர்ஸ்தீப் பிடித்திருந்தால் ஆட்டமே மாறி இருந்திருக்கும். ஆனால் எப்போதும் கேட்சை கோட்டைவிடும் பாகிஸ்தான் இன்று ஃபில்டிங்கில் அசத்த, இந்தியா தடுமாறியது. மேலும், ரிஸ்வானுக்கு ஒரு ரன் அவுட் வாய்ப்பை ரவி பிஸ்னாய் வீணடித்தார். அதிரடியாக ஆடுகிறேன் என்று கூறி, இந்திய வீரர்கள் கொத்தாக விக்கெட்டுகளை இழந்ததும் தோல்விக்கு காரணம் தான்.


Click it and Unblock the Notifications











