ஆன்டிகுவா: 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஹோல்டரின் அபார பந்துவீச்சால் நிலைகுலைந்த இந்திய கிரிக்கெட் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.
மேற்கிந்திய தீவுகளில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி மழையால் ரத்தானது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 2 போட்டிகளிலும் இந்திய அணி வென்றது.

இதனால் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது. இரு அணிகளுக்கு இடையேயான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அந்த அணியின் தொடக்க வீரர்கள் சற்று நிலைத்து சீரான ரன்களை குவித்தனர். ஆனால் இந்த நிலையான ஆட்டம் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்களை மட்டுமே மேற்கிந்திய தீவுகள் அணி எடுத்தது.
190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணி அடுத்து ஆடியது. இந்திய வீரர்கள் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. தவான் 5 ரன்களிலும் கோஹ்லி 3 ரன்களிலும் அவுட் ஆகினர். 47 ரன்கள் எடுப்பதற்குள் இந்திய அணி 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
டோணி சற்று பொறுப்பாக விளையாடி அரைசதம் கடந்த நிலையில் அவுட் ஆனார். இந்திய அணி 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மேற்கிந்திய தீவுகள் அணியின் ஹோல்டர் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை அள்ளி அசத்தினார்.
இத்தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.