கொல்கத்தா: இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மாவின் அபார இரட்டை சதத்தால் இந்திய அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் துவங்கி 150 ஆண்டு ஆகியுள்ளதை கொண்டாடும் இந்நாளில் இந்த போட்டி நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் போட்டியை காண வந்திருந்தனர்.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது. 50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 404 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 264 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார்.
மொத்தம் 173 பந்துகளை சந்தித்த அவர், 33 பவுண்டரிகளும், 9 சிக்சர்களையும் விளாசி 264 ரன்கள் குவித்தார்.
இதன் பின்னர் ஆடிய இலங்கை அணி 43.1 ஓவர்களில் ரோஹித் சர்மா எடுத்த 264 ரன்களுக்கும் குறைவாக 251 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அந்த அணியில் கேப்டன் மேத்யூஸ் மட்டுமே அதிகபட்சமாக 75 ரன்களை எடுத்தார். திரிமன்ன 59 ரன்களையும் திசர பெரேரா 29 ரன்களையும் தில்ஷன் 34 ரன்களையும் எடுத்தனர்.
இந்திய அணியில் தவால் குல்கர்னி 10 ஓவர்கள் வீசி 34 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும், ஸ்டூவர்ட் பின்னி 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
ஸ்டுவர்ட் பின்னியின் பந்துகள் ஸ்விங் ஆகியது. இதனால் அவர் தில்ஷன், சந்திமால் ஆகியோரை தொடக்கத்திலேயே வீழ்த்த இலங்கை 48/4 என்று சரிவு கண்டது.
இதற்கு முன்னர் 2000ஆம் ஆண்டில் ஷார்ஜாவில் இலங்கைக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டி ஒன்றில் சனத் ஜெயசூரியா இந்தியாவுக்கு எதிராக 161 பந்துகளில் 189 ரன்களை விளாச இலங்கை அணி 299 ரன்கள் குவித்தது. ஆனால் தொடர்ந்து ஆடிய இந்திய அணி கங்குலி தலைமையில் வெறும் 54 ரன்களில் சுருண்டது வரலாறு.
அன்று ஜெயசூரியாவின் 189 ரன்களைக் கூட எடுக்காமல் மிக கேவலமான தோல்வியைத் தழுவியது இந்தியா. இன்று இந்தியாவின் ரோஹித் சர்மாவின் 264 ரன்களுக்கும் சற்று குறைவாக 251 ரன்கள் எடுத்து கவுரமாக தோற்றுள்ளது இலங்கை.
இலங்கை அணியின் ஓட்டை பீல்டிங்குதான் இந்திய அணியின் ரன் குவிப்புக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. மொத்தம் 5 ஒருநாள் போட்டிகளைத் தொடரில் இந்திய அணி 4 போட்டிகளிலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.