டெல்லி: ஆசியக் கோப்பை தொடருக்காக தேர்வு செய்யப்பட்ட 17 பேர் கொண்ட இந்திய அணியில், மொத்தமாக 7 பேர் மும்பை அணிக்காக ஆடி வருவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட்டில் மும்பை கிரிக்கெட் லாபியை பற்றி கேள்விப்படாதவர்களே இருந்திருக்க முடியாது. மும்பை அணிக்காக ஆடி வரும் வீரர்களை எளிதாக இந்திய அணிக்காக தேர்வு செய்ய, அம்மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் அனைத்தையும் செய்வார்கள் என்று சொல்லப்படுவதுண்டு. இதற்கு மும்பையில் இருந்து இந்திய அணிக்காக ஆடிய வீரர்களின் எண்ணிக்கையையும், மற்ற மாநிலங்களில் இருந்து ஆடிய வீரர்களின் எண்ணிக்கையையும் பார்த்தாலே புரியும்.

அவ்வளவு ஏன் ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் கூட மும்பை நகரத்திற்கு என்று தனி அணி உள்ளது. மகாராஷ்டிரா தனி அணியாகவும், மும்பை தனி அணியாகவும் விளையாடி வருகிறார்கள். அந்த அளவிற்கு மும்பை கிரிக்கெட் சங்கம் வலிமையானதாக உள்ளது. இவ்வளவு ஏன், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அஜித் அகர்கர் ஆகியோரும் கூட மும்பையைச் சேர்ந்தவர்கள் தான். இவர்களும் கூட மும்பை வீரர்களுக்காக எதையும் செய்வது ஆச்சரியமாக இருக்கிறது.
ஆசியக் கோப்பைக்காக தேர்வு செய்யப்பட்ட 17 இந்திய வீரர்களில், 7 பேர் மும்பை அணியுடன் தொடர்புடையவர்கள். கேப்டன் ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக ஆடி வந்தவர்கள், வருபவர்கள். அதேபோல் ஐபிஎல் தொடரில் திலக் வர்மா, பும்ரா, இஷான் கிஷன் ஆகியோர் மும்பை அணிக்காக விளையாடி வருபவர்கள்.

இதில் ஆசியக் கோப்பைத் தொடருக்கான அணியில் திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் தேர்வு செய்யப்பட்டது தான் மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது. ஏனென்றால் சூர்யகுமார் யாதவிற்கு பதிலாக இந்திய அணியில் சாஹல் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டதற்கு மும்பை லாபியே காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய அணியில் மீண்டும் மும்பை லாபி தலைதூக்கி இருப்பதாக ரசிகர்களிடையே விமர்சனங்கள் எழுந்துள்ளன.