
மும்பையின் வாங்கடே மைதானத்தில் நடைபெறப் போகும் மேற்கு இந்தியத் தீவுகளுடனான டெஸ்ட் போட்டிதான் சச்சினின் கடைசி டெஸ்ட் போட்டியாகும்.
இந்த கடைசி டெஸ்ட் போட்டியில் சச்சின் முச்சதம் அடிக்க வேண்டும் என்று விருப்பம் வெளியிட்டுள்ளார் கவாஸ்கர். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது...
சச்சினின் கிரிக்கெட் வாழ்க்கையில் வாங்கடேவுக்கு தனி இடம் உண்டு. அங்கு தான் அவர் தனது முதல் தர போட்டியில் அறிமுகமானார். இப்போது தனது கடைசி டெஸ்ட் போட்டியை அங்கு ஆடவுள்ளார். இதன் மூலம் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முழுச் சுற்றை எட்டுகிறது.
எல்லோரும் சச்சின் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் நான் 300 ரன்களை அவர் குவிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். குறைந்தது இரட்டைச் சதமாவது அவர் அடிக்க வேண்டும். அதுதான் அவரைப் போன்ற மேதைகளுக்குப் பொருத்தமானதாக இருக்கும் என்றார் கவாஸ்கர்.