
வெஸ்ட் இண்டீஸ் டூர்
இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை 22ம் தேதி முதல் ஜூலை 27ம் தேதி வரையிலும், டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரையிலும் நடைபெறவிருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

மீண்டும் ஓய்வு
அதில் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், பும்ரா, முகமது ஷமி உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஏற்கனவே ஒவ்வொரு தொடரிலும் ஓய்வு தரப்பட்டு கொண்டே தான் இருக்கிறது. எனினும் தற்போது ஷிகர் தவான் தலைமையில் ருதுராஜ் கெயிக்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட இளம் படை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இந்திய அணியை வழிநடத்தப்போகும் 8வது கேப்டன் ஷிகர் தவான் ஆகும்.

ஆகாஷ் கண்டனம்
இந்நிலையில் இதற்கு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ஓய்வு என்றால் என்ன தெரியுமா?.. இன்னும் எவ்வளவு ஓய்வு தான் உங்களுக்கு தேவை?.. முன்பெல்லாம் ஒரு வீரர் ஃபார்ம் அவுட்டானால், அவர் புறக்கணிக்கப்பட்டு, மீண்டும் உள்நாட்டு தொடரில் விளையாடிய பிறகு சேர்க்கப்படுவார். ஆனால் தற்போது ஒரு வீரர் ஃபார்ம் அவுட்டானால், அவருக்கு ஓய்வு என்ற ஒன்றை கொடுக்கிறார்கள். இது குறித்து எந்த கவலையும் இல்லையா?

என்ன பதில் சொல்வீர்கள்?
ஒரு வீரர் சொதப்புகிறார் என்றால் அவருக்கு தொடர்ந்து நிறைய போட்டிகளை ஆட வைக்க வேண்டும். ஓய்வு தரக்கூடாது. ருதுராஜ் கெயிக்வாட், ஹூடா போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தருவது சிறப்பு தான். ஆனால் அவர்கள் நிறைய ஸ்கோர் எடுத்துவிட்டால் என்ன செய்வீர்கள். பெரிய வீரர்கள் வந்தவுடன் உங்களை புறக்கணிக்கிறோம் என்று கூறமுடியுமா? அதனை தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார்களா? என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications