இந்தியா ஆஸ்திரேலியா போட்டி
இந்தியா ஆஸ்திரேலியா இடையே 2020 ஜனவரி மாதம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. அந்த தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டி பெங்களூரில் நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 285 ரன்கள் குவித்தது.
ரோஹித் - கோலி ஆட்டம்
இந்தியா 286 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது. வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் அந்த சேஸிங் மிக பரபரப்பாக இருந்தது. ரோஹித் சர்மா, விராட் கோலி இணைந்து கூட்டணி அமைத்து அணியை வெற்றி பெறச் செய்தனர்.
யோசனை கேட்ட ஆரோன் பின்ச்
கோலி 89 ரன்களும், ரோஹித் சர்மா 119 ரன்களும் குவித்தனர். அவர்கள் கூட்டணியை பிரிக்க முடியாமல் தவித்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் அம்பயரிடம் அவர்களை அவுட் ஆக்க யோசனை கேட்டுள்ளார். அதற்கு அம்பயர் மைக்கேல் காஃப் வேறு ஒரு பதிலை கூறி உள்ளார்.
நம்ப முடியாத விஷயம்
இது பற்றி அம்பயர் மைக்கேல் காஃப் கூறுகையில், "நான் ஸ்கொயர் லெக்கில் ஆரோன் பின்ச்சுக்கு அருகே நின்று இருந்தேன். அப்போது அவர் இந்த இரண்டு வீரர்களின் கூட்டணியை பார்ப்பது நம்ப முடியாத விஷயமாக இருப்பதாக கூறினார்." என்றார்.
எப்படி பந்து வீசுவது?
மேலும், "அதன் பின் அவர் தான் எப்படி அவர்களுக்கு பந்து வீசுவது என கேள்வி கேட்டார். நான் அவரைப் பார்த்து, என் ஆட்டம் முடிந்து விட்டது. இங்கே நீங்கள் தான் ஆட வேண்டும் என்றேன்." எனக் கூறினார் அம்பயர் மைக்கேல் காஃப்.
வில்லங்கமான கேள்வி
ஆரோன் பின்ச் கேட்ட வில்லங்கமான கேள்விக்கு பந்துவீச்சு பற்றி அம்பயர் மைக்கேல் காஃப் பேசி இருந்தால் பெரும் சிக்கலில் சிக்கி இருப்பார். பின்ச் அந்த அம்பயர் வேலைக்கு வேட்டு வைக்கப் பார்த்துள்ளார். நல்ல வேளையாக அவர் சாதுரியமாக பதில் சொல்லி தப்பி இருக்கிறார்.
இந்தியா வெற்றி
அந்தப் போட்டியில் ரோஹித் சதம், கோலி அரைசதம் அடித்த நிலையில், இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அந்த ஒருநாள் தொடரை இந்தியா 2 - 1 என கைப்பற்றியது. அதுவே இந்தியா கடைசியாக வென்ற ஒருநாள் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.