அக்டோபரில் நடத்தப்படுமா?
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 29ம் தேதி துவங்கவிருந்த ஐபிஎல் சீசன் 2020, காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த போட்டிகள் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. டி20 உலக கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட்டால், ஐபிஎல் அந்த அட்டவணையில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பணப்புழக்கம் அதிகமான ஐபிஎல்
எப்போதுமே இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் அனைத்து வீரர்களுக்கும் பிடித்தமானதாக ஐபிஎல் தொடர் விளங்குகிறது. அதேபோல அதிகமான பணப்புழக்கம் இருக்கும் இடமாகவும் காணப்படுகிறது. இந்த ஆண்டு ஐபிஎல்தொடர் ரத்து செய்யப்பட்டால் 5,000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளதை வைத்து, எந்த அளவிற்கு இந்த தொடரில் பணப்புழக்கம் காணப்படுகிறது என்று தெரியவருகிறது.
ஏபி டீ வில்லியர்ஸ் உருவாக்கம்
இந்நிலையில் கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளேவுடன் மேற்கொண்ட கலந்துரையாடலில் பேசிய தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டீ வில்லியர்ஸ், சிறப்பான ஐபிஎல் அணியை உருவாக்கியுள்ளார். இந்த அணிக்கு கேப்டனாகவும் விக்கெட் கீப்பருமாக முன்னாள் இந்திய அணியின் கேப்டனும் தற்போதைய சிஎஸ்கே கேப்டனுமான தோனியை அமர்த்தியுள்ளார் வில்லியர்ஸ். மேலும் ஐபிஎல்லின் மற்ற அணி கேப்டன்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.
வெளிநாட்டு வீரர்கள்
இந்திய வீரர்கள் வீரேந்திர சேவாக், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், பும்ரா ஆகியோரும் டீ வில்லியர்சின் இந்த ஐபிஎல் அணியில் இடம்பெற்றுள்ளனர். விராட் கோலிக்கு 3வது இடத்தையும் தனக்கு 4வது இடத்தையும் அணியில் அளித்துள்ளார் வில்லியர்ஸ். மேலும் அணியில் பென் ஸ்டோக்ஸ், ரஷித் கான், காகிசோ ரபடா ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். சிறப்பான அணியாகத்தான் இருக்கிறது வில்லியர்சின் இந்த அணி.