டெல்லி: இந்த ஆண்டு ஐபில் போட்டித் தொடரில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய குஜராத் அணியின் இறுதிப்போட்டி கனவை டி வில்லியர்ஸ், டேவிட் வார்னர் ஆகிய இரு பேஸ்ட்மேன்களும் பறித்துவிட்டனர்.
ஐபிஎல் முதல் குவாலிபையர் ஆட்டத்தில் பெங்களூர் மற்றும் குஜராத் அணி மோதின. முதலில் ஆடிய குஜராத் அணி 158 ரன்களை குவித்தது. ஆனால் பெங்களூர் அணியில் இருப்பதோ 360 டிகிரி என அழைக்கப்படும் டி வில்லியர்ஸ் அல்லவா. அவர் சும்மாவா விடுவார். குஜராத் அணியின் பந்து வீச்சை தெறிக்க விட்டார்.

47 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 79 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 18.2 ஓவர்களிலேயே 6 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டியது பெங்களூர். இப்படி தனி ஒருவராக நினைத்து பிரித்து மேய்ந்து வெற்றியை பறித்தார் டிவில்லியர்ஸ்.
போனால் போகட்டும், நமக்குத் தான் இன்னொரு வாய்ப்பு இருக்கிறதே என நினைத்து நேற்றைய எலிமினேட்டர் போட்டியில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியுடன் மோதியது குஜராத். முதலில் களம் இறங்கிய குஜராத் 7 விக்கெட் இழப்பிற்கு 162 குவித்தது.
பின்னர் இலக்கை விரட்ட களம் இறங்கிய ஹைதராபாத் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது 84 ரன்களிலேயே அந்த அணி 5 விக்கெட்களை பறிகொடுத்தது. வெற்றி நமக்குத் தான் என தொடர்ந்து பந்து வீசிய குஜராத்துக்கு வார்னர் வைத்தார் ஆப்பு. தொடக்க ஆட்டக்காரரும், அந்த அணியின் கேப்டனுமான அவர் 58 பந்துகளில் 93 ரன்களை எடுத்தார். இதன் மூலம் 4 பந்துகள் மீதம் இருக்கையில் ஹைதராபாத் வெற்றி பெற்றது.
முதன் முதலாக ஐபிஎல் போட்டியில் களம் கண்ட சுரேஷ் ரெய்னாவின் குஜராத் அணி, இந்த ஆண்டு தரவரிசையில் முதலிடத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தியது. இந்நிலையில், இறுதிப்போட்டிக்கு செல்ல இரண்டு போட்டியில் போராடிய போதிலும் அந்த அணி இரண்டிலும் தோல்வியையே சந்திக்க நேரிட்டது
இதன் மூலம் பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
நேற்று நடைபெற்ற ஆட்டத்திற்கு பிறகு குஜராத் அணியின் ஆரோன் பின்ச் கூறுகையில், கடந்த இரண்டு ஆட்டங்களிலும் நாங்கள் சவால் விடும் அளவில் ரன்கள் எடுத்திருந்தோம். கிட்டத்தட்ட 170 ரன்கள். ஆனால், உலகத்தின் தலைசிறந்த வீரர்களான (டி.வில்லியர்ஸ், வார்னர்) இருவரும் அதிரடியாக விளையாடி அதிக ரன்கள் குவித்ததன் மூலம் எங்களது வெற்றியை பறித்து விட்டனர். அவர்கள் இருவரும் நன்றாக விளையாடினர் அவர்களுக்கு பாராட்டுக்கள் என்று அவர் கூறினார்.