இந்தூர்: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், பெங்களூரு அணி தோல்வி அடைந்த போதும் டிவில்லியர்ஸ் அதிரடியாக 9 சிக்ஸர்களை பறக்கவிட்டு 89 ரன்கள் குவித்தார்.
10-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய 8-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.

இப்போட்டியில் டாசில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தோல்பட்டை காயம் காரணமாக இன்றைய போட்டியிலும் விராட் கோஹ்லி விளையாடவில்லை.
மேலும் அதிரடி வீரர் கெயிலுக்குப் பதிலாக டி வில்லியர்ஸ் களமிறங்கினார். கோஹ்லி இல்லாத பெங்களூர் அணியின் பலவீனம் இன்றைய போட்டியில் தெளிவாக தெரிந்தது. தற்காலிக கேப்டனாக செயல்பட்டு வரும் வாட்சன் பொறுப்போடு ஆடவில்லை. ஓபனிங் பேட்ஸ்மேனாக இறங்கி ஒரு ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். மற்ற வீரர்களும் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர்.
தனி ஒருவராக வாணவேடிக்கை காட்டிய டி வில்லியர்ஸ் அதிகபட்சமாக 46 பந்தில் 3 பவுண்டரி, 9 சிக்சருடன் 89 ரன்கள் குவித்தார். இறுதியில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை குவித்தது. இதையடுத்து பஞ்சாப் அணி 14.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 150 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது.