'டெவில்' போல மாறிய டிவில்லியர்ஸ்.. 31 பந்துகளில் சதம்.. தெ. ஆ.வின் முதல் 3 வீரர்களும் சதம்
ஜோஹன்னஸ்பர்க்: 31 பந்துகளில் அதி வேகமாக சதம் அடித்து தென் ஆப்பிரிக்க வீரர் ஆப் டி வில்லியர்ஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்பு நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன் 36 பந்துகளில் சதம் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. ஆனால் அதை இன்று ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்த மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் முறியடித்து விட்டார் வில்லியர்ஸ்.
முன்னதாக அவர் 16 பந்துகளில் அரை சதத்தைக் கடந்து அதிலும் புதிய உலக சாதனை படைத்து அசத்தியிருந்தார்.

மேற்கு இந்தியத் தீவுகளின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து ஆடிய வில்லியர்ஸ் 16 சிக்ஸர்களையும், 9 பவுண்டரிகளையும் விளாசினார். தொடர்ந்து ஆடி வந்த அவர் 149 ரன்கள் எடுத்து தனது பேயாட்டத்தை நிறுத்தினார்.
முன்னதாக தொடக்க ஆட்டக்காரர்களான ஹஷீம் அம்லாவும், ரைலி ரூஸோவும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 247 ரன்கள் என்ற இமாலய பார்ட்னர்ஷிப்பை போட்டுக் கொடுத்தனர்.
அதி வேகமாக ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 439 ரன்களைக் குவித்து ஓய்ந்தது.
அம்லா 153 ரன்களுடன் தொடர்ந்து களத்தில் இருந்தார். ரைலி, 128 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் மூன்று வீரர்களும் சதம் போட்டதால் தென் ஆப்பிரிக்கா புயல் வேகத்தில் ரன்களைக் குவித்து விட்டது.
சாதனைக் களம் ஜோஹன்னஸ்பர்க்
இந்த ஜோஹன்னஸ்பர்க் மைதானம் தென் ஆப்பிரிக்காவுக்கு மிகவும் ராசியான இடமாகும். மேலும் பல சாதனைகளையும் இது அங்கு படைத்துள்ளது.
இதற்கு முன்பு 2005-06 ஒரு நாள் போட்டித் தொடரில், முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 434 ரன்களைக் குவித்து புதிய உலக சாதனை படைத்தது. ஆனால் அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலிய பந்து வீச்சை பிரித்து மேய்ந்து 438 ரன்களைக் குவித்து வெற்றி பெற்றதோடு ஆஸ்திரேலிய சாதனையை சில மணி நேரங்களிலேயே தகர்த்து வீசியது.
தற்போது ஒரு அணி ஒரு இன்னிங்ஸில் எடுத்த அதிகபட்ச ரன்களாக 443 என்ற ஸ்கோர்தான் உள்ளது. இந்த சாதனை இலங்கையிடம் உள்ளது. அதை இன்று தென் ஆப்பிரிக்கா முறியடிக்கும் என்று கருதப்பட்டது. இருப்பினும் 50 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 439 ரன்களுடன் அதன் இன்னிங்ஸ் முடிந்து போனதால் புதிய வரலாறு படைக்கும் வாய்ப்பை அது தவற விட்டு விட்டது.


Click it and Unblock the Notifications