இந்த சிஎஸ்கே வீரர் தான் எனக்கு மிகவும் பிடித்த இளம் வீரர்.. கொஞ்சம் பொறுமையா இருங்க- டிவில்லியர்ஸ்
மும்பை: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரர் டெவால்ட் பிரெவிஸ் தான் தனக்கு மிகவும் பிடித்த இளம் வீரர் என்று ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். மேலும், இந்த இளம் வீரரிடம் ரசிகர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். முன்னாள் தென் ஆப்பிரிக்க கேப்டனான டி வில்லியர்ஸ், தான் பிரெவிஸுடன் தனிப்பட்ட முறையில் இணைந்து பணியாற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சில ரசிகர்கள் பிரவீஸின் சிறந்த ஆட்டத்திறன் முடிந்துவிட்டது என்று கருதுவதை அவர் சுட்டிக்காட்டினார். பிரெவிஸ் இன்னும் மிகவும் இளமையானவர் என்றும், அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது என்றும் டி வில்லியர்ஸ் வலியுறுத்தினார். தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலான 'AB de Villiers 360' இல் பகிர்ந்துள்ள வீடியோவில் அவர் இது குறித்துப் பேசியுள்ளார்.

"நான் எப்போதும் டெவால்ட் பிரெவிஸ் பெயரையே கூறுவேன். ஓய்வு நேரங்களில் அவருடன் நான் சிறிது பயிற்சி மேற்கொள்கிறேன். அவர் இன்னும் மிகவும் இளமையானவர். பலர் அவரது சிறந்த ஆட்டம் முடிந்துவிட்டது என்பது போல் நினைக்கிறார்கள். அவர் இன்னும் தனது 20-களின் தொடக்கத்தில்தான் இருக்கிறார். அந்த இளம் வீரருக்கு இன்னும் நீண்ட கிரிக்கெட் வாழ்க்கை மீதமுள்ளது" என்று டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
"அவரிடம், உனக்கு 28 முதல் 32 வயது ஆகும்போது எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார் என்றேன். அதுதான் எனது ஆட்டத்தின் உச்சக்கட்ட காலமாக இருந்தது. அவர் இன்னும் அந்த வயதில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறார். அனுபவம் கூடும்போது மட்டுமே உங்களது ஆட்டத்தை உங்களால் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். அவர் இன்னும் அந்த நிலையை எட்டவில்லை.
அதற்குள்ளாகவே மக்கள் அவரிடம் சோர்வடைந்துவிட்டதாகவும், அவர் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை என்றும் கூறுகிறார்கள். நான் இளமையாக இருந்தபோது மிகவும் சீரற்ற ஆட்டத்தையே வெளிப்படுத்தினேன். அதனால் தான் நான் எப்போதும் டெவால்ட் பிரெவிஸ் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். அவரது எழுச்சிக்காக நான் காத்திருக்கிறேன், அவர் என்ன செய்யப் போகிறார் என்பது எனக்குத் தெரியும்" என்று அவர் மேலும் கூறினார்.
தற்போது நமீபியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் பிரெவிஸ் இடம் பெற்றுள்ளார். நமீபியாவுக்கு எதிரான முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 18 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தபோது, பிரெவிஸ் 50 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து அணியை ஓரளவு காப்பாற்றினார்.
அதைத் தொடர்ந்து ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில், வெறும் 32 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் குவித்து தனது அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தார். இப்போட்டியில் 13.4 ஓவர்களில் 145 ரன்கள் என்ற இலக்கை தென் ஆப்பிரிக்கா எளிதாகக் கடந்த நிலையில், பிரெவிஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
தென் ஆப்பிரிக்க அணி நிர்வாகம் டெவால்ட் பிரெவிஸின் பேட்டிங் வரிசையைத் தொடர்ந்து மாற்றி அமைப்பது குறித்தும் ஏபி டி வில்லியர்ஸ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். டி20, 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட்டில் 3-வது வரிசையிலும், டெஸ்ட் போட்டிகளில் 4-வது வரிசையிலும் களம் இறங்க வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் அடுத்த போட்டி, விண்ட்ஹோக்கில் உள்ள நமீபியா கிரிக்கெட் மைதானத்தில் செப்டம்பர் 1, செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.


Click it and Unblock the Notifications

