மும்பை: திலக் வர்மா அரைசதம் அடிக்கவிடாமல் ஹர்திக் பாண்டியா ஆட்டத்தை முடித்த விவகாரத்தில், தென்னாப்பிரிக்கா முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி 18 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. அந்த நேரத்தில் திலக் வர்மா 47 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதனால் திலக் வர்மா நிச்சயம் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 18வது ஓவரின் முதல் 4 பந்திலும் 4 சிங்கிள் சேர்க்கப்பட்டது. இதனால் திலக் வர்மா 49 ரன்களுடன் களத்தில் இருந்தார். அப்போது பேட்டிங் செய்ய வந்த ஹர்திக் பாண்டியா, திடீரென சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்தார். இதனால் திலக் வர்மாவால் அரைசதத்தை எட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ரசிகர்கள் பலரும் ஹர்திக் பாண்டியாவுக்கு பொறாமை என்று விமர்சித்தனர்.
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா - திலக் வர்மா விவகாரம் குறித்து பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே தனது ட்விட்டர் பக்கத்தில், திலக் வர்மா அரைசதம் அடிக்க முடியாத விவகாரம் பற்றி ரசிகர்கள் தொடர்ந்து விவாதிப்பது ஆச்சரியமாக உள்ளது. டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை சதத்தை தவிர்த்து வேறு பெரிதாக எந்த மைல்கல்லும் கணக்கில் கொள்ளப்படாது.

நாம் அனைவரும் குழு விளையாட்டில் தனி வீரர் ஒருவரின் சாதனையை பற்றி அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். டி20 கிரிக்கெட்டில் அரைசதங்கள் கணக்கில் கொள்ளப்படும் என்ற நம்பிக்கையே இல்லை. டி20 கிரிக்கெட்டில் நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் சேர்ப்பதே போதுமானது என்று பதிவிட்டுள்ளார். இதற்கு கீழ் வந்து நட்சத்திர முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ், இறுதியாக, ஒருவர் இதனை சொல்லிவிட்டார் என்று பதிவிட்டுள்ளார்.