மும்பை: கடந்தாண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளின்போது பெட்டிங் சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பான விசாரணைக்கு வரும்படி பிரபல நடிகர் அர்பாஸ் கானுக்கு மும்பை போலீஸ் சம்மன் அனுப்பியது. அதன்படி ஆஜரான அவர், கிரிக்கெட் பெட்டிங்கில் ஈடுபட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
ஐபிஎல் சீசன் 11 சமீபத்தில் முடிந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது. இந்த நிலையில், மும்பை போலீசார் நடத்திய சோதனைகளில், கடந்த ஆண்டு நடந்த 10வது சீசனின்போது பெட்டிங் சூதாட்டம் மிகப் பெரிய அளவில் நடந்துள்ளது தெரிய வந்தது. இது தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்தனர்.
இந்த பெட்டிங் கும்பலின் முக்கியமானவரான ஜலான் என்பவரை போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெட்டிங்கில் ரூ.100 கோடிக்கு மேல் புழங்கியது தெரியவந்தது. இந்த பெட்டிங்கில் பிரபல நடிகர் சல்மான் கானின் சகோதரரும் நடிகருமான அர்பாஸ் கானுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதையடுத்து விசாரணைக்கு ஆஜராகும்படி சர்பாஸ் கானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி, இன்று போலீசில் சர்பாஸ் கான் ஆஜரானார். அப்போது, கடந்த, 6 ஆண்டுகளாக பல கிரிக்கெட் பெட்டிங்கில் ஈடுபட்டதாக சர்பாஸ் கான் கூறியுள்ளார். ஆனால், 2018 ஐபிஎல் தொடர்பான பெட்டிங்கில் ஈடுபடவில்லை என்று அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிகிறது.
ஆனால், 2018 ஐபிஎல் போது, சர்பாஸ் கான் பெட்டிங்கில் ஈடுபட்டு, ரூ.2.80 கோடி இழந்துள்ளார். ஆனால், அந்த பணத்தை தராமல் ஏமாற்றியுள்ளதாக பெட்டிங் நடத்திய ஜலான் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். அதனால் விசாரணை சூடுபிடித்துள்ளது.