மொஹாலி: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இருப்பினும் அந்த அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா, பஞ்சாப் அணியின் ஜெர்சியை ரசிகர்களுக்கு வழங்கியது வரவேற்பை பெற்றுள்ளது.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட்டிங் செய்த குஜராத் அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. பஞ்சாப் அணி வீரர்கள் அதிக டாட் பால்கள் விளையாடியதே, அந்த அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

பஞ்சாப் அணியின் ஆட்டம் எந்த அளவிற்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததோ, அதனைவிட அதிகமாக அந்த அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தாவின் செயல்பாடுகளும் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெறும். ஒவ்வொரு போட்டியின் போதும் பஞ்சாப் அணி வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் உற்சாக கொடுக்க ப்ரீத்தி ஜிந்தா மைதானத்திற்கு வருவார். ப்ரீத்தி ஜிந்தாவை பார்க்கும் ரசிகர்கள் கூடுதல் உற்சாகம் அடைவார்கள்.
போட்டியில் பஞ்சாப் அணியின் சிறு சிறு முன்னேற்றத்தையும் ப்ரீத்தி ஜிந்தா அதிகமாக கொண்டாடுவார். அதேபோல் வெற்றிபெற்ற பின் பஞ்சாப் வீரர்களை நேரில் சென்று கைகொடுத்து பாராட்டுவார். இந்த நிலையில் நேற்றையப் போட்டியில் பஞ்சாப் அணி தோல்வியடைந்தாலும், ப்ரீத்தி ஜிந்தா ரசிகர்களுக்கு இலவசமாக அந்த அணியின் ஜெர்சியை வீசி எறிந்தார். இதனை பிடித்த அணிந்த ரசிகர்கள், பஞ்சாப் அணிக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்தனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதேபோல் நேற்றையப் போட்டிக்கு பின் குஜராத் அணி வீரர்களையும் சந்தித்து நடிகை ப்ரீத்தி ஜிந்தா பாராட்டியுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பஞ்சாப் அணிக்காக ஆடிய ஷமியை சந்தித்து சில நிமிடங்களில் உரையாடினார். எதிரணி வீரர்களையும் ப்ரீத்தி ஜிந்தா சந்தித்து பாராட்டியுள்ளது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.