அகமதாபாத்: ஐபிஎல் தொடக்க விழாவில் நடிகை தமன்னா தென்னிந்திய சினிமா மொழிப் பாடலுக்கும் நடனமாடி கவனத்தை ஈர்த்தார்.
ஐபிஎல் 2023ஆம் ஆண்டு சீசன் தொடக்க விழா விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் தொடக்க விழா நடத்துவதை பிசிசிஐ நிறுத்திவிட்டது.
இதற்கு காரணம், 2019ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலில் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததை அடுத்து, தொடக்க விழா நிகழ்ச்சி 2019ஆம் ஆண்டு முதல் நடத்தப்படவில்லை. இந்த நிலையில், கொரோனாவுக்கு பிறகு 10 அணிகள் மீண்டும் சொந்த மண் மற்றும் வெளியூர் என்ற வகையில் போட்டியை நடத்துகிறது.

இதனை கொண்டாடும் விதமாக தான் தற்போது ஐபிஎல் தொடக்க விழா மிகவும் வித்தியாசமாக நடைபெற்று வருகிறது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் சுமார் ஒரு லட்சம் பார்வையாளர்கள் முன் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. சுமார் ஒரு மணி நேரம் வரை இந்த நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளர் மந்திரா பேடி தொகுத்து வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாலிவுட் பாடகர் அர்ஜித் சிங்கின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பாலிவுட்டின் பிரபல பாடல்களை அச்சு அசலாக உற்சாகமாக பாடி, ரசிகர்களை சிலிர்க்க வைத்தார். இதனைத் தொடர்ந்து நடிகைகள் ராஷ்மிகா மந்தனா மற்றும் தமன்னா ஆகியோர் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சிகளை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கண்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து நடிகை தமன்னாவின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு மாநில சினிமாக்களின் பாடலுக்கு ஆடி அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.