கொல்கத்தா: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணியின் ஹாரி ப்ரூக் 55 பந்துகளில் சதம் அடித்து அசத்தியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் சதத்தை பதிவு செய்துள்ள ஹாரி ப்ரூக்கிற்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
16வது ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஐதராபாத் அணி சார்பாக மயங்க் அகர்வால் - ஹாரி ப்ரூக் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. ஐதராபாத் அணி ரூ.13.25 கோடி கொடுத்து ஏலத்தில் வாங்கியதால், ஹாரி ப்ரூக் மீதான எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் இதுவரை ஹாரி ப்ரூக் ஆடிய மூன்று போட்டிகளிலும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 21 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சி கொடுத்தார். தொடர்ந்து லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 13 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்திய ஆடுகளத்தில் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஹாரி ப்ரூக் திணறியது வெளிப்படையாக தெரிந்தது.
இதனால் ஐதராபாத் அணி நிர்வாகம் அவருக்கு வாய்ப்பு வழங்குவதை கைவிட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் கொல்கத்தா அணிக்கு எதிராக ஹாரி ப்ரூக் மீண்டும் களமிறங்கினார். எப்படியும் சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் பந்தில் ஆட்டமிழப்பார் என்று ரசிகர்கள் பேசி வந்தனர். ஆனால் தொடக்கத்திலேயே உமேஷ் யாதவ், ஃபெர்குசன் ஆகியோரின் ஓவர்களில் அதிரடி காட்டினார்.

இதனால் முதல் 12 பந்துகளில் 32 ரன்களை விளாசிய ஹாரி ப்ரூக், ஸ்பின்னர்கள் அட்டாக்கில் வந்த பின், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அடுத்த 20 பந்துகளில் 20 ரன்களை மட்டுமே எடுத்த அவர், 32 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதனைத் தொடர்ந்து வேகப்பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கிய ஹாரி ப்ரூக், ஃபெர்குசன் வீசிய ஓரே ஓவரில் 23 ரன்களை விளாசினார். இதன்பின்னர் கடைசி ஓவரில் சதத்தை விளாசி மிரட்டினார். இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் சதம் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.