மும்பை: பிசிசிஐ தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் நாளை மதியம் செய்தியாளர்களை சந்திக்க உள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
2015ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் செய்தியாளர்களை சந்திப்பது சாதாரண நடைமுறையாக இருக்கும். செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையிலும், ரசிகர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் தேர்வுக் குழு உறுப்பினர்களின் பதில் இருக்கும். ஆனால் 2016க்கு பின் தேர்வுக் குழு உறுப்பினர்கள் செய்தியாளர்களை சந்திப்பது மிகப்பெரிய நிகழ்வாக மாறியது.

ஒவ்வொரு வீரரும் எதற்காக தேர்வு செய்யப்படுகிறார், என்ன காரணத்திற்காக இந்த வீரர் வெளியேற்றப்பட்டார், என்ன திட்டத்திற்காக புதிய வீரர் சேர்க்கப்படுகிறார் என்பதெல்லாம் தெளிவாக ரசிகர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும். ஆனால் 2015க்கு பின் இந்திய ரசிகர்களின் கேள்விகளுக்கு பிசிசிஐ செவி கொடுப்பதே இல்லை. கடைசியாக 2019 உலகக்கோப்பைத் தொடரின் போது பெயருக்கு எம்எஸ்கே பிரசாத் செய்தியாளர்களை சந்தித்தார்.
அதன்பின் வந்த தேர்வுக் குழு தலைவர் சேத்தன் சர்மா ஒருமுறை கூட செய்தியாளர்களை சந்திக்கவே இல்லை. அதேபோல் அஜித் அகர்கர் பொறுப்பேற்ற போதும் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. இந்த நிலையில் ஆகஸ்ட் 30ஆம் தேதி ஆசியக் கோப்பைத் தொடர் தொடங்கவுள்ளது. இதற்கான இந்திய அணி நாளை தேர்வு செய்யப்படவுள்ளது. இதில் ராகுல் டிராவிட், ரோகித் சர்மா மற்றும் அஜித் அகர்கர் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
இந்த நிலையில் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்ட பின், தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார். இதனால் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பின் தேர்வுக் குழு தலைவர் செய்தியாளர்களை சந்திப்பதால், கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கும், நீக்கப்பட்டதற்குமான விளக்கங்கள் ரசிகர்களுக்கும் அளிக்கப்படும் என்று தெரிய வருகிறது.