ஐதராபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. சிறப்பாக ஆடிய மன்கட் 64 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 44 ரன்களும் விளாசினர்.
ஐபிஎல் தொடரின் 58வது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து லக்னோ அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் மார்க்ரம் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 183 ரன்களை இலக்காக லக்னோ அணி நிர்ணயித்துள்ளது. அதிகபட்சமாக கிளாஸன் 47 ரன்களை விளாசி அசத்தினார்.

இதையடுத்து லக்னோ அணி சார்பாக கைல் மேயர்ஸ் - டி காக் தொடக்கம் கொடுத்தனர். அதில் கைல் மேயர்ஸ் 14 பந்துகளில் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க, டி காக் உடன் இளம் வீரர் மன்கட் இணைந்தார். இந்த கூட்டணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் காரணமாக லக்னோ அணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் 30 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதையடுத்து ஸ்பின்னர்களை அட்டாக்கில் கொண்டு வந்தார் மார்க்ரம்.
இதன் பலனாக மார்க்கண்டே பந்துவீச்சில் டி காக் 29 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின்னர் வந்த ஸ்டாய்னிஸ் நிதான ஆட்டத்தை தொடர்ந்தார். இதனால் 10 ஓவர்களில் 68 ரன்கள் சேர்த்திருந்தது. மன்கட் மற்றும் ஸ்டாய்னிஸ் இருவரும் விக்கெட்டை இழக்க கூடாது என்று கவனமாக ஆடினர். 13 ஓவர்களை வரை அமைதி காத்த இருவரும், டைம் அவுட்டிற்கு பின் அதிரடியை தொடங்கினர். ஒவ்வொருக்கும் ஒரு சிக்சர் பறந்தது. இதனால் இளம் வீரர் மன்கட் ஐபிஎல் தொடரில் முதல் அரைசதத்தை 35 பந்துகளில் பதிவு செய்தார்.
இந்த நிலையில் 16வது ஓவரை வீச அபிஷேக் சர்மா அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் ஸ்டாய்னிஸ் 2 சிக்சர்களை விளாசி 40 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து வந்த நிக்கோலஸ் பூரன் அதே ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்களை விளாசினார். அந்த ஓவரில் மட்டும் 31 ரன்கள் விளாசப்பட்டது. தொடர்ந்து நடராஜன் ஓவரிலும் 14 ரன்கள் சேர்க்கப்பட, கடைசி 18 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்தது.

பின்னர் புவனேஷ்வர் குமார் வீசிய 18வது ஓவரில் 10 ரன்கள் சேர்க்கப்பட, நடராஜன் வீசிய 19வது ஓவரில் 10 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் கடைசி ஓவரில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய நிலை லக்னோ அணிக்கு வந்தது. அந்த ஓவரின் முதல் இரு பந்துகளிலேயே லக்னோ அணி இலக்கை எட்டி வெற்றிபெற்றது. இதன் மூலம் லக்னோ அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
அதேபோல் இந்தப் போட்டியில் அடைந்த தோல்வியால் ஐதராபாத் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. லக்னோ அணிக்காக சிறப்பாக ஆடிய பூரன் 13 பந்துகளில் 44 ரன்களை விளாசி அசத்தினார். கடந்த ஆண்டு ஐதராபாத் அணிக்காக ஆடிய பூரன், நடப்பு சீசனில் லக்னோ அணிக்காக களமிறங்கி ஐதராபாத் அணியை வீழ்த்தியுள்ளார்.